அமெரிக்கா-சீனா வர்த்தக மோதல்.. இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? விஷயம் இதுதான்!
பெய்ஜிங்: சீனா பொருட்கள் மீது அமெரிக்கா 104% அளவுக்கு வரியை விதித்திருக்கிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் உச்சத்தை எட்டியிருக்கிறது. இது இந்தியாவையும் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகம் முழுவதும் 43% பொருட்களின் விநியோகத்தை சீனாவும், அமெரிக்காவும் கைக்குள் வைத்திருக்கின்றன. இப்படி இருக்கையில் இரு நாடுகளும் வர்த்தக போரில் ஈடுபட்டால் அது உலகம் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அமெரிக்காவின் வரி தொடர்பாக பதிலளித்துள்ள சீனா, நாங்கள் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம். உங்களால் முடிந்ததை செஞ்சிக்கோங்க. நாங்க பின்வாங்க மாட்டோம் என உறுதியாக தெரிவித்திருக்கிறது. எனவே சீன பொருட்கள் அமெரிக்காவில் விற்பனையாவது சரியும். 2024ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான பொருட்கள் வர்த்தகம் $585 பில்லியன் என்கிற அளவில் இருந்து வந்தது. இதில் சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள்தான் அதிகம். அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு குறைவாகவே பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது.
அதாவது அமெரிக்கா சீனாவிலிருந்து $440 பில்லியன் அளவுக்கு இறக்குமதி செய்தது. மறுபுறம் சீனா அமெரிக்காவிலிருந்து $145 பில்லியன் மட்டுமே இறக்குமதி செய்திருந்தது. எனவே இரு நாடுகளுக்கு இடையில் $295 பில்லியன் அளவுக்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு, சோயாபீன்ஸ், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மருந்துகள், எரிபொருட்கள் ஏற்றுமதியாகின்றன. பதிலுக்கு சீனா மின்னணுப் பொருட்கள், கணினிகள், பொம்மைகள், மின்சார வாகன பேட்ரிகள், ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கின்றன. இப்பபோது சீனா மீதான வரி உயர்த்தப்பட்டிருப்பதால், சீன பொருட்கள் அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்பனையாகும். எனவே அந்நாட்டு மக்கள் சீன தயாரிப்பை புறக்கணிப்பார்கள்.
இதனால் சீன நிறுவனங்கள் மாற்று சந்தையை தேடும். எனவே சீன அரசு தனது பொருட்களுக்கு மானியத்தை கொடுத்து இந்தியா போன்ற நாடுகளில் குறைந்த விலைக்கு விற்க தொடங்கும்.
1. இரும்புப் பொருட்கள்
2. அலுமினியம்
3. சோலார் பேனல்கள்
4. மின்னணுப் சாதனங்கள்
5. இயந்திரத்தின் உதிரி பாகங்கள்
6. பேட்டரிகள்
7. பொம்மைகள்
8. துணிகள்
ஆகியவை இந்தியாவில் மிக குறைந்த விலையில் விற்பனையாக வாய்ப்புகள் இருக்கின்றன. மேலோட்டமாக பார்த்தால் இது நல்ல விஷயம் மாதிரிதான் தெரியும். ஆனால், இந்தியாவில் உள்ள உற்பத்தியாளர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். உதாரணத்திற்கு இரும்பு பொருட்கள் குறைந்த விலையில இந்தியாவின் மார்க்கெட்டுக்குள் நுழைந்தால் இங்கு இருக்கும் TATA Steel, JSW போன்ற நிறுவனங்கள் பாதிக்கப்படும்.
ஜவுளி பொருட்கள் உள்ளே நுழைந்தால் திருப்பூர் ஆடை தொழிற்சாலை மொத்தமாக காலியாகும். இப்படி எல்லா துறையிலும் பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அப்படியே முடங்கிப்போகும். குறிப்பாக தமிழ்நாடு, குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
இதையெல்லாம் தடுக்க சீன தயாரிப்புகளை ஓவராக உள்ளே அனுமதிக்க கூடாது என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 'anti-dumping duty' எனப்படும் தடுப்பு வரியை விதிப்பதன் மூலம் MSME துறையை பாதுகாக்க முடியும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே! சீனா பொருட்களை இறக்குமதி செய்யலாமா? அல்லது சர்வதேச அளவில் அமெரிக்காவின் வரியை எதிர்த்து குரல் கொடுக்கலாமா?












Click it and Unblock the Notifications