மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கலிஃபோர்னியாவில் அஞ்சலி
ஃப்ரீமாண்ட்(யு.எஸ்) : மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலலிதாவுக்கு, அமெரிக்காவில் இயங்கும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக பிரிவின் சார்பில் சிலிக்கான்வேலியின் ஃப்ரீமாண்ட் நகரில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜெயலலலிதாவின் தீவிர விசுவாசியாகவும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் வீரராகவும் அறியப்பட்ட, அமெரிக்க ஒருங்கிணைப்பாளர் அபுகான், இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

இந்திய தூதரக ஜெனரல் வெங்கடேசன் அசோக், இந்தியன் அமெரிக்கன் கவுன்சில் நிறுவனத் தலைவர் டாக்டர் ரொமேஷ் ஜப்ரா, ஃப்ரீமாண்ட் முன்னாள் துணை மேயர் அனு நடராஜன், கலிஃபோர்னியா தமிழ் அகடமி நிறுவனரும் முன்னாள் அமைச்சர் செ.மாதவனின் மகளுமான வெற்றிச் செல்வி ஆகியோர் பங்கேற்று புகழ் அஞ்சலி செலுத்தினர்.
ஃப்ரீமாண்ட் இந்துக் கோவில் வளாகத்தில் மாலை மூன்று மணி அளவில் மவுன அஞ்சலியுடன் தொடங்கியது. 5 மணி வரையிலும் முதல்வர் ஜெயலலிதாவின் பல்வேறு பரிமாணங்களையும், செயல் திட்டங்களையும் விவரித்து தலைவர்கள் நினைவு கூர்ந்தனர்.

அபுகான் பேசுகையில் அரசியல் சவால்கள், சோதனைகளை எவ்வாறு லாவகமாக கையாண்டு வெற்றி பெற்று சாதனை புரிந்தார் என்று விவரித்தார். திராவிட இயக்கங்களின் முதல் பெண் தலைவராக விளங்கியவர்
பகுத்தறிவாளர்கள் நிறைந்த திராவிட இயக்கத்தில் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்ட தலைவராக தன்னை பிரகனப்படுத்திக் கொண்டார். அவரின் மறைவு தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அரசியலிலும் மிகப்பெரிய வெற்ரிடட்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்களின் இதயங்களில் என்றென்றும் நீடித்து வாழ்வார் என்றும் கூறினார்.
ஒன்பதாம் வகுப்பு மாணவி முவாஃபிகா நூர்தீன் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற 91ம் ஆண்டிலிருந்து நிறைவேற்றிய முக்கிய திட்டங்களை, புள்ளி விவரங்களுடன் சாதனைத் தொகுப்பாக படைத்தார். மழை நீர் சேகரிப்பு, காற்றாலைகள் உட்பட அனைத்து திட்டங்களையும் அவர் கூறி முடித்த போது நினைவாஞ்சலி கூட்டம் என்பதையும் மறந்து கைத்தட்டி வரவேற்றனர். அந்த கைத்தட்டல் முதல்வராக ஜெயலலிதாவின் சாதனைகளை பறைசாற்றுவதாக இருந்தது.
இந்தியன் அமெரிக்கன் கவுன்சில் நிறுவனர் டாக்டர் ரொமேஷ் ஜப்ரா பேசுகையில் , இந்த ஆண்டு நடந்த இந்திய சுதந்திர தின விழாவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'மக்கள் தலைவர்' விருது வழங்கி கவுரவித்ததை நினைவு கூர்ந்தார்

முன்னாள் அமைச்சர் செ.மாதவனின் மகள் வெற்றிச் செல்வி தான் சென்னையில் ஜெயலலிதாவை சந்தித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மிகவும் புத்திகூர்மை படைத்தவர் ,அதிகமான புத்தகங்கள் வாசிப்பவர், உலக அரசியலை நன்கு அறிந்தவர், அரிதான அரசியல் தலைவர் என்று புகழாரம் சூட்டினார்.
ஃப்ரீமாண்ட் முன்னாள் துணை மேயர் அனு நடராஜன், ஜெயலலிதாவின் ஆளுமைத் திறன் கண்டு எப்போதும் வியக்கிறேன், பெண் இனத்திற்கே முன் மாதிரியாக விளங்குபவர் என்று பாராட்டினார்.
கலிஃபோர்னியா துணைத் தூரகத்தின் இந்தியத் தூதர் வெங்கடசேன் அசோக் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார். மறைந்த முதல்வரின் இழப்பு இந்திய தேசத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஜெயலலிதாவின் அரசுத் திட்டங்கள் முன்மாதிரியானவை, தொட்டில் குழந்தைத் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு கணிணி போன்றவை அவருடைய தொலை நோக்கு பார்வையை எடுத்துக் காட்டுகின்றன. அவரது ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு குறிப்பிடத் தக்க வகையில் சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டார்.
பல்வேறு மொழி பேசும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் இந்த அஞ்சலி கூட்டத்தில் கலந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மரியாதை செய்தனர்.
அமெரிக்க அ.இ.அ.தி.மு.க வுடன் , கலிஃபோர்னியாவில் வெளியாகும் வாரப் பத்திரிக்கையான இந்தியா போஸ்ட் இதழும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
அரசியல் கட்சி, இன, மத , மொழி வேறுபாடுகளைக் கடந்து பல்வேறு தரப்பினரும் ஒருங்கிணைந்த உள்ளன்போடு கலந்து கொண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியாக இருந்தது.
- இர தினகர்












Click it and Unblock the Notifications