ஓவர் ஆட்டம்.. டிரம்புக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் கடிதம்!
வாஷிங்டன்: சமீபத்தில் ஹாவர்ட் பல்கலைக்கழகத்திற்கு எதிராக டிரம்ப் எடுத்த நடவடிக்கைகள் சர்வதேச அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், அமெரிக்காவின் 100க்கும் மேற்பட்ட பல்கலை மற்றும் கல்லூரிகள் சேர்ந்து டிரம்புக்கு எதிராக கடிதம் எழுதியுள்ளன.
கடிதத்தில், கல்வி அமைப்புகளில் அமெரிக்க அரசின் தலையீடு ஓவராக இருக்கிறது என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா அரசு ஜனநாயக தன்மையுடன் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் அதன் கல்வி நிலையங்கள் மிகுந்த ஜனநாயகப்பூர்வமாக இருந்து வந்திருக்கின்றன. குறிப்பாக ஹாவர்ட் பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொண்டால், அமெரிக்காவின் பல்வேறு தவறான நடவடிக்கைகளுக்கு முதல் எதிர்ப்பு குரல் இங்கிருந்துதான் எழும். ஹாவர்ட் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டு ஜனநாயகத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களாக மாறியவர்கள் பலர் இருக்கின்றனர்.
தி இந்து ஆங்கில இதழின் ஆசிரியரான என்.ராம் ஹாவர்ட்டில் படித்தபோது அங்கு நடந்த, வியட்நாம் போருக்கு எதிரான போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். இன்று வரை சிறந்த பத்திரிகையாளராகவும், நடுநிலைத்தன்மையுடனும் அவர் குரல் கொடுத்து வருவதற்கு அந்த போராட்டம் முக்கியமானதாக இருந்தது. இப்படி போராட்ட மரபுகளை கொண்ட இந்த பல்கலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, இஸ்ரேல் நடத்தும் போருக்கு எதிராக சமீபத்தில் போராட்டங்கள் நடந்தன.
சர்வதேச அளவில் அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்கிறது. ஆனால், அதன் சொந்த நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள், இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். இது டிரம்புக்கு கவுரவ பிரச்சனையாக மாறியது. எனவே பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், அதை வரையறுக்கவும் நிர்வாக ரீதியில் சில உத்தரவுகள் பிறக்கப்பிக்கப்பட்டன.
இந்த உத்தரவுகள் பற்றி 2 கடிதங்கள் அனுப்பப்பட்டன. முதல் கடிதத்தில் பல்கலையில் பன்முகத்தன்மை, சமத்துவம் உள்ளிட்டவற்றை ஆதரிக்கும் பாட திட்டங்கள் மாற்ற உத்தரவிடப்பட்டிருந்தது. இரண்டாவது கடிதத்தில் இஸ்ரேல் எதிர்ப்பு மனநிலையில் உள்ள மாணவர்கள் பற்றி தெரியப்படுத்த வலியுறுத்தப்பட்டிருந்தது. இது இரண்டுக்கும் பல்கலைக்கழகம் ஒத்துவரவில்லை. இது தன்னாட்சி கல்வி நிலையம். இங்கு என்ன நடக்க வேண்டும் என்பதை வெளியிலிருந்து யாரும் உத்தரவிட முடியாது என்று கறாராக சொல்லிவிட்டது.
அப்புறம் என்ன? டிரம்ப் நிர்வகம் அதிரடியாக சில விஷயங்களை தொடங்கியது. அதாவது பல்கலைக்கழகத்திற்கான நிதியை வெட்டியது. மட்டுமல்லாது பல்கலையின் சார்பில் உள்ள சொத்துக்களுக்கு வருமான வரியை கொடுக்க வேண்டும் என்று கூறியது. பொதுவாக கல்விய நிலைய சொத்துக்களுக்கு வரி வசூல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். ஆனால் ஹாவர்ட் பல்கலைக்கு மட்டும் வரி வசூல் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இப்படியான நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டன குரல்கள் எழுந்தன.
இதனையடுத்து அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்த வரி வசூல் தொடர்பாகவும், கடிதம் தொடர்பாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர். இது அதிகாரப்பூர்வமான நடவடிக்கை இல்லை என்று கூறி டிரம்ப் நிர்வாகம் ஜகா வாங்கியது.
இந்நிலையில்தான் அமெரிக்காவின் 100க்கும் மேற்பட்ட பல்கலை மற்றும் கல்லூரிகள் டிரம்ப்புக்கு எதிராக கடிதம் எழுதியுள்ளன. கடிதத்தில், "பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கான நிதியை அரசியல் அழுத்தம் கொடுக்க பயன்படுத்துவதையும், கல்வியில் அரசியல் தலையீட்டையும் நாங்கள் எதிர்க்கிறோம். சீர்த்திருத்தங்கள் அவசியமானதுதான். ஆனால் அரசின் அத்துமீறலை ஏற்க முடியாது" என ப்ரின்ஸ்டன், பிரவுன் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications