மாபெரும் இந்திய கோடீஸ்வரரின் மகள் உகாண்டா சிறையில் அடைப்பு.. உணவு கூட தராமல் சித்திரவதை!
உகாண்டா: இந்திய வம்சாவளி கோடீஸ்வரரான பங்கஜ் ஓஸ்வாலின் மகள் வசுந்தரா ஓஸ்வால் கடந்தாண்டு சுமார் 3 வாரங்கள் சிறையில் இருக்க வேண்டி இருந்தது. செய்யாத குற்றத்திற்காக வசுந்தரா ஓஸ்வாலை கைது செய்த போலீசார், அவரிடம் பணத்தைப் பிடுங்கித் தொடர் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். இது தொடர்பாக அவர் கூறிய விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடந்தாண்டு உகாண்டாவில் உள்ள வெளிநாட்டுச் சிறையில் சிக்கிக் கொண்டவர் இந்திய வம்சாவளி கோடீஸ்வரரான பங்கஜ் ஓஸ்வாலின் மகள் வசுந்தரா ஓஸ்வால்..

உகாண்டாவில் சிறை:
இவர் கடந்த ஆண்டு உகாண்டாவில் இருந்தபோது அங்குக் கொலை வழக்கு ஒன்றில் சுமார் 3 வாரங்கள் சிறையில் இருக்க வேண்டி இருந்தது. இவர் தனது தந்தையின் முன்னாள் ஊழியரைக் கடத்தி கொலை செய்ததாகப் பொய்யான குற்றச்சாட்டில் மூன்று வாரங்கள் சிறையில் இருந்தார். இருப்பினும், விசாரணையில் தான் அந்த முன்னாள் ஊழியர் பிறகு தான்சானியாவில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார்.
இருப்பினும் இந்த இடைப்பட்ட நாட்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 21ஆம் தேதி வரை அவர் சிறையில் இருக்க வேண்டி இருந்தது. அதன் பிறகே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 26 வயதான ஓஸ்வால் அதிபயங்கர கொலை மற்றும் கடத்தல் குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
யார் இவர்
பல பில்லியன் டாலர் சொத்து வைத்துள்ள ஓஸ்வால் குரூப் குளோபல் நிறுவனத்தின் உரிமையாளர்களான பங்கஜ் மற்றும் ராதிகா ஓஸ்வால் ஆகியோரின் மகள் தான் வசுந்தரா ஓஸ்வால். இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் நிதித்துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பின் போதே அவர் $200 மில்லியன் மதிப்புள்ள உலகின் மிக விலையுயர்ந்த வில்லாவில் தான் வசித்து வந்தார்.
படிப்பிற்கு பிறகு அவர் 2020இல், அவர் PRO இண்டஸ்ட்ரீஸ் குழுவின் தலைவராக பணியில் இணைந்தார். PRO இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை ஏற்ற முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தார். அவர் தற்போது பிஆர்ஓ இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநராக (நிதி) பணியாற்றுகிறார். அவரது தலைமையின் கீழ், PRO இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மிகப் பெரியளவில் வளர்ந்தது. அவர் PRO இண்டஸ்ட்ரீஸ் கடனை வெகுவாக குறைத்தார். மேலும், நிறுவனத்தை வலிமையாக மாற்றினார்.
என்ன நடந்தது
உகாண்டாவில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் பேசிய வசுந்தரா ஓஸ்வால், "என்னை முதலில் 5 நாட்கள் தடுப்பு காவலில் வைத்தனர். தொடர்ந்து இரண்டு வாரங்கள் சிறையில் அடைத்தனர்.. அப்போது மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்பட்டனர். அவர்கள் என்னைக் குளிக்க அனுமதிக்கவில்லை.. எனக்கு உணவு மற்றும் தண்ணீர் கூட தரவில்லை. உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைத் தரக் கூட என் பெற்றோர் போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில், தண்டனை கொடுக்கும் விதமாகக் கழிவறையைப் பயன்படுத்தக் கூட அனுமதிக்கவில்லை.
எனது வீட்டைத் தேடும் போது கூட அவர்களிடம் சேர்ச் வாரண்ட் கேட்டேன். அதற்கு அவர்கள், நீங்கள் உகாண்டாவில் இருக்கிறீர்கள்.. நாங்கள் எதையும் செய்யலாம் என அதட்டினர். இன்டர்போலுக்குச் செல்லும்படி வற்புறுத்தினார்கள். நான் யோசித்த போது திடீரென ஒரு ஆண் அதிகாரி என்னைப் பிடித்து வலுக்கட்டாயமாக வேனில் வீசினார். நான் வக்கீலை சந்திக்கக் கூட அனுமதிக்கவில்லை. இப்படியெல்லாம் ரூல்ஸ் பேசினால் காலம் முழுக்க சிறையில் தான் இருக்க வேண்டும் என சொல்லி மிரட்டி வாக்குமூலம் பெற்றனர்.
பணம் பறிக்க முயற்சி
கடந்தாண்டு அக்டோபர் 10ம் தேதியே கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட நபர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், என்னை அவர்கள் வெளியேறவிடவில்லை. ஏதேதோ சொல்லி சிறையிலேயே வைத்திருக்கப் பார்த்தனர். உயிருடன் இருப்பது தெரிந்த பிறகும் அக்டோபர் 21ம் தேதி வரை சிறையில் அடைத்தனர்.
நான் ரிலீஸ் ஆன பிறகும் சுமார் 1.5 மாதங்கள் வரை பாஸ்போர்ட் தரவில்லை. அதன் பிறகே பாஸ்போர்ட் கொடுத்தனர். எங்களிடம் இருந்து முடிந்த வரை பணத்தைப் பறிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இதுபோல ஏதேதோ சொல்லி வழக்கைத் தாமதப்படுத்தினர்" என்றார்.












Click it and Unblock the Notifications