பாகிஸ்தானுடன் இந்தியா போருக்கு போகக்கூடாது.. திருமாவளவன் திட்டவட்டம்
திருச்சி: பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக இருக்கிறது எனில், அதை உலக நாடுகள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டுமே தவிர, அந்நாட்டுடன் போருக்கு போகக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது, "காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மனிதாபிமானமற்ற கொடூரமான செயல். பயங்கரவாதத்தின் கோழைத்தனம். அப்பாவி பொதுமக்களை மிக கேவலமான முறையில் படுகொலை செய்திருக்கிறார்கள். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது.

இந்த பயங்கரமான நடவடிக்கைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். அனைத்து இந்தியர்களும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது. சாதி, மதம் வேறுபாடு இல்லாமல் இந்தியர் என்கிற ஒரு உணர்வில் இணைந்து இந்த பயங்கரவாதத்தை எதிர்ப்போம்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று சொல்லியிருந்தோம். இதற்கு எங்களுக்கு எந்த அரசியல் ஆதாயமும் கிடையாது. இது எங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடு. நாங்கள் சொன்ன உடனேயே அமித் ஷா பதவி விலகி விடப்போவதில்லை. அதேபோல பாஜக அரசுக்கு நாங்கள் விடுத்த வேண்டுகோள் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தப் போவதில்லை. ஆகவே இப்போதும் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் இது எங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடு.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டால், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி அடைந்து விடும். அங்கு சுற்றுலா மேம்பட்டுவிடும். யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம். தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றெல்லாம் பாஜக தலைமையிலான மத்திய அரசு சொல்லிவந்தது. மத்திய அரசு சொன்னதை போலவே 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது.
இப்பொழுது மக்கள் தாராளமாக அங்கு சுற்றுலா செல்லலாம் என்று மத்திய அரசு கூறியிருந்தது. மத்திய அரசின் பேச்சை நம்பி மக்கள் அங்கு சுற்றுலா சென்றார்கள். அப்படி நம்பி சென்றவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
சிறப்பு சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கிவிட்டால், யார் வேண்டுமானாலும் இங்கே வருவீர்கள், தொழில் தொடங்குவீர்கள், இங்கு உள்ள இயற்கை வளங்களை சுரண்டுவீர்கள், இதையெல்லாம் எங்களால் அனுமதிக்க முடியாது என்பதற்கான எச்சரிக்கைதான் இந்த தாக்குதல்.
அதேபோல இந்த தாக்குதல் சம்பவத்தில், தாக்குதல் நடத்தியவர்கள் பொதுமக்களை இஸ்லாமியர்களா? என்று பரிசோதித்து ஆடையை கழற்றி பார்த்து அதன் பின்னர் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. அது உண்மை இல்லை. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படிப் பார்த்தால் அங்கு குதிரை சவாரி தொழில் செய்து கொண்டிருந்த ஒரு இஸ்லாமிய சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஆகவே இப்படியான செய்திகளுக்கு ஆதாரம் கிடையாது.
காஷ்மீரில் நடந்த தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையேயான போராக மாறிவிடக்கூடாது. நாம் நம்முடைய வலிமையை வேறு நாட்டிடம் நிரூபித்து காட்டக்கூடாது. இந்த போர் உலக நாடுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒருவேளை பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணைபோகுமேயானால் அதை உலக நாடுகள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். இப்படி செய்து அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அதைவிட்டு போருக்கு போவது என்பது தேவையில்லாதது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications