அடிக்கடி உறுத்திய கண்ணில் ஆபரேஷன்.. சிங்கப்பூர் மருத்துவமனையில் விஜயகாந்த்!
சிங்கப்பூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்ணில் ஏற்பட்ட தொடர் வலி மற்றும் உறுத்தல் காரணமாக அவரை சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு ஆபரேஷன் நடந்துள்ளது. நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளாராம்.
லோக்சபா தேர்தலின்போது வாக்களிக்க வந்த விஜயகாந்த் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும்போது குழப்பமாக காணப்பட்டார். இதையடுத்து அவரது மனைவி பிரேமலதா வந்து அவருக்கு உதவி செய்தார். இது சர்ச்சையைக் கிளப்பியது.
இதேபோல டெல்லியில் மோடியைச் சந்தித்தபோதும் அவர் மீது விழுவது போல வந்தார் விஜயகாந்த். மேலும் தனது கண்ணைக் காட்டி மோடியிடமும் எதையோ சொன்னார். இதுவும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆனால் விஜயகாந்த்துக்கு கண்ணில் ஏதோ பிரச்சினை இருந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. சில மாதங்களாகவே அவருக்கு கண் வலி இருந்துள்ளது. இதுதொடர்பாக 3 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் போயிருந்தபோது அங்குள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சையும் பெற்றுள்ளார்.
அதன் பின்னர் லோக்சபா தேர்தலிலும் அவர் பிரசாரம் செய்தார். இந்த நிலையில் தற்போது தனது மகன் சண்முகப்பாண்டியன் நடித்து வரும் சகாப்தம் படத்தின் ஷூட்டிங்குக்காக மலேசியா போயுள்ளார் விஜயகாந்த்.
போன இடத்தில் கடந்த 10ம் தேதி அவருக்கு கண்வலி வந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்து சிங்கப்பூர் போனார் விஜயகாந்த். ஏற்கனவே பார்த்த மருத்துவமனையில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இறுதியில் அவருக்கு கண்ணில் ஆபரேஷன் செய்ய முடிவெடுத்து அறுவைச் சிகிச்சையும் நடந்தது.
தற்போது மருத்துவமனையில் இருந்து வரும் விஜயகாந்த் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளாராம். இதையடுத்து நாளையே அவர் சென்னையும் திரும்புகிறாராம்.