பிரேசிலில் 62 பேருடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்து சிதறி பெரும் விபத்து
ரியோ: பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் 62 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது.. நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்து சிதறிய காட்சிகள் வெளியாகி உள்ளது.
பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. வின்ஹெடோ நகரில் சென்று கொண்டிருந்த போது விமானம் நிலை தடுமாறு கீழே விழுந்து வெடித்ததை உள்ளூர் தீயணைப்புப் படை உறுதிப்படுத்தி உள்ளது.

நெதர்லாந்தைச் சேர்ந்த பிஎன்ஓ நியூஸ் என்ற செய்தி நிறுவனம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுகிறது. பின்னர் வின்ஹெடோ நகரில் உள்ள வீடுகளின் மீது தலைகீழாக கவிழ்ந்து விழுந்தது. இதில் சில நொடிகளில் விமானத்தின் ஒரு பெரிய பகுதியில் தீப்பிடித்து எரிகிறது. பின்னர் விமானத்தில் இருந்து பெரிய கரும்புகை வானத்தை நோக்கி வெளியேறுவதாக உள்ளது.
பிஎன்ஓ நியூஸ் வெளியிட்ட செய்திகளின் படி, 62 பேர் சென்ற வியோபாஸ் 2283 என்ற விமானம் செங்குத்தாக கீழே விழுந்து வெடித்து சிதறி உள்ளது. தீப்பிழம்பாக அந்த இடமே மாறி உள்ளது. யாரும் உயிருடன் பிழைக்கவில்லை. ஏனெனில் விமானம் வந்து விழுந்த வேகத்தில் வெடித்து சிதறியது. அதில் ஏற்பட்ட தீப்பிழம்பு காண்போரை கண்ணீரில் ஆழ்த்தி உள்ளது.
WATCH: New video shows Voepass Flight 2283 crashing into homes in Vinhedo, Brazil. Number of victims not yet known. pic.twitter.com/Ndwodo2Vcz
— BNO News (@BNONews) August 9, 2024
வியோ பாஸ் விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், 58 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 4 பணியாளர்களுடன் சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையமான குருல்ஹாஸ் (Guarulhos) நோக்கிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதாக உறுதிப்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்று அறிக்கையில் கூறவில்லை.. விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து குறித்து அறிந்த பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா,ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். தெற்கு பிரேசிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் விபத்து குறித்து தகவல் தெரிவித்த நிலையில், அங்கிருந்தவர்களிடம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை வைத்தார். இந்த விபத்து குறித்து விசாரணையும் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications