"ச்சீ.." அண்ணன் - தங்கை உறவை கொச்சைப்படுத்திய பாகிஸ்தான் பல்கலைக்கழகம்.. கொந்தளிப்பில் மக்கள்
தேர்வுத் தாளுக்கு சம்பந்தமே இல்லாத கேள்வி என்பதோடு மட்டுமல்லாமல், ஆபாசத்தின் உச்சமாகவும், புனிதமான அண்ணன் - தங்கை உறவை கொச்சைப்படுத்தும் விதமாகவும் இருந்தது.
இஸ்லாமாபாத்: அண்ணன் - தங்கை உறவை கொச்சைப்படுத்தும் ஆபாசமான கேள்வி ஒன்று, பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத் தேர்வில் கேட்கப்பட்டதற்கு பொதுமக்களும், கல்வியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பொருளாதாரத்திலும், கல்வியிலும் ஆகக் கடைசியில் இருக்கும் பாகிஸ்தானை மேலும் சீரழிக்காமல் சில கல்வியாளர்கள் விடமாட்டார்கள் என அந்நாட்டு பிரபலங்களே கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்தக் கேள்வித்தாளை வடிவமைத்த பேராசிரியரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும், அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உயரிய பல்கலைக்கழகம்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செயல்பட்டு வருகிறது 'கோம்சாட்ஸ்' (COMSATS) தொழில்நுட்ப பல்கலைக்கழகம். அந்நாட்டில் உள்ள உயரிய பல்கலைக்கழங்களில் இதுவும் ஒன்று. இந்நிலையில், அப்பல்கலைக்கழகத்தில் சில வாரங்களுக்கு முன்பு 'எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்' படிப்புக்கான தேர்வு நடைபெற்றது. இதில் கேட்கப்பட்ட ஒரு கேள்விதான் பாகிஸ்தான் மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

உச்சக்கட்ட ஆபாசம்
அந்தக் கேள்வி பின்வருமாறு: ஜூலியும், மார்க்கும் சகோதர சகோதரிகள். இவர்கள் கல்லூரி கோடை விடுமுறையில் பிரான்ஸை சுற்றிப்பார்க்க செல்கிறார்கள். அன்றைய தினம் இரவு, அங்குள்ள ஒரு கடற்கரை அருகே உள்ள ரிசார்ட்டில் அவர்கள் தங்குகிறார்கள். அப்போது அவர்களுக்கு இடையே காம உணர்வு ஏற்படுகிறது. இருவரும் கருத்தடை சாதனங்களும் வைத்திருந்ததால், அவர்கள் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள். பின்னர், இதுபோல இனி நடக்கக்கூடாது எனவும் உறுதி எடுத்துக்கொள்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து மாணவர்கள் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என அந்தக் கேள்வி முடிகிறது.

மாணவர்கள் கொந்தளிப்பு
தேர்வுத் தாளுக்கு சம்பந்தமே இல்லாத கேள்வி என்பதோடு மட்டுமல்லாமல், ஆபாசத்தின் உச்சமாகவும், புனிதமான அண்ணன் - தங்கை உறவை கொச்சைப்படுத்தும் விதமாகவும் இந்தக் கேள்வி இருந்ததால் தேர்வறையிலேயே பல மாணவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பேராசிரியர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தி, அந்தக் கேள்வியை விட்டுவிடுமாறும் தெரிவித்தனர். இருந்தபோதிலும், மனம் சமாதானம் அடையாத மாணவர்கள், தேர்வு முடிந்ததும் அந்தக் கேள்வியை தங்கள் செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

சீல் வைக்க வலியுறுத்தல்
இந்த புகைப்படம் வைரலாக பரவவே, பொதுமக்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், இஸ்லாமிய மதத்தை அவமானப்படுத்தும் வகையில் இந்த கேள்வி இருப்பதாக தெரிவித்து கோம்சாட்ஸ் பல்கலைக்கழகத்தை எதிர்த்து பல அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மேலும், பாகிஸ்தான் திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த விவகாரத்தை முன்வைத்து அந்த பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த கேள்வியை அனுமதித்த கோம்சாட்ஸ் பல்கலைக்கழகத்துக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

பணிநீக்கம் - மன்னிப்பு
விஷயம் பூதாகரம் ஆனதை அடுத்து, சம்பந்தப்பட்ட கேள்வித்தாளை வடிவமைத்த பேராசிரியர் கைர் உல் பஷாரை பல்கலைக்கழக நிர்வாகம் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்கூட்டியே கேள்வித்தாளை ஆய்வு செய்யாததால் இந்த விபரீதம் நடந்துவிட்டதாகவும், இதற்காக மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வாகவும் கோம்சாட்ஸ் பல்கலைக்கழகம் கடிதம் எழுதியுள்ளது.












Click it and Unblock the Notifications