சிதறிய சதை துண்டுகள்.. மலைபோல் உடல்கள்! தெறிக்கும் ரத்தம் - 3வது நாளாக இஸ்ரேல் - பாலஸ்தீன் யுத்தம்
ஜெருசலேம்: இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையேயான போர் தொடங்கி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இரு தரப்பும் மாறி மாறி நடத்தி வரும் ஏவுகணை தாக்குதல் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பாலஸ்தீனின் காசா, மேற்கு கரை பகுதிகளை ஆக்கிரமிக்க அந்நாட்டின் மீது பல ஆண்டுகளாக இஸ்ரேல் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட காசாவுக்குள் நுழைந்து தாக்கியதாகவும், ஜெருசலேமில் உள்ள அக்சா மசூதிக்கு நுழைய முயன்றவர்களை விரட்டி அடித்ததாகவும் கூறப்படுகிறது. பாலஸ்தீன் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் பல ஆண்டுகளாக நடத்தி வரும் ஏவுகணை தாக்குதல் காரணமாக லட்சக்கணக்கான பாலஸ்தீன் மக்கள், பெண்கள், குழந்தைகள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளார்கள்.

ரமலான், ரம்ஜான், பக்ரீத் ஆகிய பண்டிகை காலங்களில் புனித அக்சா மசூதிக்கு தொழுகை நடத்த செல்லும் பாலஸ்தீனர்கள் மீது போலீஸ், ராணுவத்தை ஏவி இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும் வழக்கம். பாலஸ்தீன் வசம் மீதம் இருக்கும் நிலப்பகுதிகளை கைப்பற்ற இஸ்ரேல் இப்படி தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அக்சா மசூதிக்குல் பாலஸ்தீனர்கள் தொழுகை நடத்த இஸ்ரேல் தடை விதித்து இருப்பதால் பதற்ற நிலை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நிலையில் ஜோர்டான் வெளியுறவுத் துறை அமைச்சர் கடந்த வாரம் அல் அக்சா மசூதிக்கு சென்றபோது இஸ்ரேலிய படைகள் காலணிகளுடன் நுழைந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல், அங்கு உள்ள இஸ்லாமிய தலைவர்களின் கல்லறைகளை பாலஸ்தீன் படைகள் சேதப்படுத்தியதாகவும், இதனை கண்டித்து ஜோர்டான், பாலஸ்தீன் நாடுகள் இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்நிலையில்தான் கடந்த சனிக்கிழமை திடீரென பாலஸ்தீனிலிருந்து இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகள் பாய்ந்து உள்ளன. காசா பகுதியிலிருந்து இஸ்ரேலின் ஆயுத கிடங்குகள், ராணுவ மையங்கள், விமான நிலையங்களை நோக்கி 5000 க்கும் அதிகமான ஏவுகணைகள் பாய்ந்தன. இந்த தாக்குதலுக்கு காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இதற்கு ஆபரேசன் அல் அக்சா பிலட் என்ற பெயரில் ஹமாஸ் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறது.
ஹமாஸ் அமைப்பின் ராணுவ தலைவராக இருக்கும் முஹம்மது தெய்ப், "அல் அக்சா மசூதியை இஸ்ரேல் இழிவுபடுத்தினார்கள். இஸ்லாமிய இயக்கங்கள் மீது அந்த அமைப்பு தாக்குதல் நடத்தியது. எதிரியை நாங்கள் எச்சரித்தோம். இதற்கு பதிலடி தரும் வகையில் ஹமாஸ் ராணுவ நடவடிக்கையில் இறங்கியது. துப்பாக்கி போன்ற ஆயுதங்களை யாரெல்லாம் வைத்து உள்ளீர்களோ அவர்கள் அதை வெளியில் எடுங்கள். இது நமக்கான நேரம்." என்று அவர் அழைப்பு விடுத்தார்.
இதனை அடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் போர் பிரகடனத்தை அறிவித்தது. உடனடியாக இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது. தாக்குதல்கள் தொடரும் என்றும் கூறப்படுகிறது. நேற்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் காசா உடனான போருக்கு அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்தது. கடந்த மூன்று நாட்களாக இரு தரப்பினரும் ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பாலஸ்தீனுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் குதித்து இருக்கிறது. இதுவரை நடந்த தாக்குதல்களில் இரு தரப்பிலும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications