மலேசிய விமானத்தைக் கடத்தியது ரஷ்ய தீவிரவாதிகள்?.. உலா வரும் புது பரபரப்பு!
சென்னை: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அது தொடர்பாக மலேசியா தரும் செய்திகள் பெரும் குழப்பத்தையும், பதட்டத்தையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் விமானம் காணாமல் போகவில்லை, கடத்தப்பட்டுள்ளதாக ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்தக் கடத்தலை மேற்கொண்டது ரஷ்யாவைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்றும் அது கூறுகிறது. அந்த விமானத்தில் சீனாவைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்கள் நான்கு பேர் இருந்ததாகவும், அவர்களைக் குறி வைத்தே விமானம் கடத்தப்பட்டிருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
மேலும் இந்த விமானக் கடத்தல் சீன அரசுக்கும், மலேசிய அரசுக்கும் நன்றாகத் தெரியும் என்றும், ஆனால் இரு நாடுகளுக்கும் ரஷ்யா நட்பு நாடு என்பதால் விஷயத்தை கமுக்கமாக வைத்து, தீவிரவாதிகளுடன் ரகசியப் பேச்சுக்களில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் இந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.
அந்த இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி...
உலக பொருளாதாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சீன செல்வந்தர்கள் 4 பேர் ரஷ்ய கடத்தல் கும்பலால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் 4 பேரும் ஒருசேர இந்த விமானத்தில் பயணித்ததை அறிந்த ரஷ்ய கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் போலி கடவு சீட்டு மூலம் அந்த விமானத்தில் பயணித்து சீனா சென்று தரையிறங்கும் முன் அதிநவீன தொழில் நுட்பத்துடன் செயற்கைகோள் கண்ணில் படாமல் ரஷ்யாவிற்கு கடத்தி சென்றுள்ளனர்.
அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் விமான நிலையத்தில் கூக்குரல் இட்டபோது சீன அரசாங்கம் பயணிகளின் உறவினர்களை விமான நிலையத்தில் இருந்து அகற்றி தனியார் விடுதியில் தங்க வைத்தனர்.
அவ்வுறவினர்களை ரகசியமாக விமான பயணிகளிடம் பேச வைத்துள்ளனர். இவ்வாறு மலேசிய அரசாங்கமும், சீன அரசாங்கமும் தங்கள் நாட்டிற்கு ரஷ்யா நட்பு நாடு என்பதாலும் இரு நாட்டிற்கும் அவபெயர் ஏற்படாமல் இருக்க இந்த விஷயத்தை ரகசியமாக வைத்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.