'ஆபரேஷன் அஜய்' நாடு திரும்புவது மகிழ்ச்சி.. அரசுக்கு நன்றி.. இந்தியாவுக்கு திரும்பும் பயணிகள் பேட்டி
ஜெருசலேம்: போர் நடைபெற்று வரும் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது. போர் விமானம் மூலமாக இந்தியர்கள் பல்வேறு குழுக்களாக இந்தியா அழைத்து வரப்பட இருக்கிறார்கள். இதனிடையே, இந்தியா திரும்ப இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அங்குள்ள இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதலை தொடுத்தனர். சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ஒரு நிமிடம் திக்குமுக்காடிப் போனது. அதன்பிறகே சுதாரித்த இஸ்ரேல் ;பதிலடி நடவடிக்கையை தொடங்கியது. ஒரு வாரத்தை நெருங்கும் நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் மேலும் தீவிரம் ஆகிக் கொண்டு வருகிறதே தவிர பதற்றம் குறைந்தபாடில்லை.

ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் இருக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரை முழுவதும் முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், அந்த நாட்டின் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. தரைவழி தாக்குதலுக்கும் ரெடியாக இருக்கிறது. இஸ்ரேல் அரசு கண் அசைத்தால் போதும் நேரடியாக கசாவிற்குள் நுழைந்த் தாக்குதல் தொடுக்க இஸ்ரேல் வீரர்கள் எல்லையில் ஆயுதங்களுடன் காத்திருக்கிறார்கள்.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான யுத்தத்தில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இ இரு தரப்பிற்கும் இடையே நீடித்து வரும் சண்டையால் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இஸ்ரேலில் வசித்து வரும் வெளிநாட்டவர்களும் போரால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
அமெரிக்கர்கள் மட்டும் 22 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் கல்வி, சுற்றுலா என பல்வெரு காரணங்களுக்காக சென்ற சுமார் 20 ஆயிரம் தங்கியுள்ளனர். அவர்களை மீட்டு கொண்டு வருவதற்காக 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இதற்காக இந்தியாவில் இருந்து சிறப்பு விமானங்களும் இஸ்ரேல் புறப்பட்டு சென்றுள்ளன.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நிறுத்தப்பட்டுள்ள சிறப்பு விமானம் மூலாமாக முதல் கட்டமாக 230 இந்தியர்கள் அடங்கிய குழுவினர் இந்தியாவுக்கு வருகை தர உள்ளனர். இதனிடையே, இந்தியா திரும்ப இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஹர்ஷ் என்ற இளைஞர் கூறுகையில், ஆபரேஷன் அஜய் மூலமாக பிரதமர் மோடி எங்களுக்கு உதவ முன் வந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இங்குள்ள சூழலை பார்த்து எனது பெற்றோர் கவலைப்பட்டனர். தற்போது நான் வீட்டுக்கு திரும்ப இருப்பதால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்" என்றர். அதேபோல், விஷேஷ் என்ற மற்றொரு இந்திய இளைஞர் கூறுகையில், "இங்கு அச்சமாக உள்ளது. தற்போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். மீட்பு பணிகளை மேற்கொண்டு இருக்கும் இந்திய அரசுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications