வளைத்த ராணுவம்! இம்ரான் வீட்டிற்கு போன "தளபதி".. நடு இரவில் மிரட்டலா? பாகிஸ்தானில் நடந்தது என்ன?
இஸ்லாமாபாத்: நேற்று பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழப்பதற்கு முன் என்னவெல்லாம் நடந்தது.. ஆட்சி கவிழும் கடைசி நொடியில் என்னவெல்லாம் நடந்தது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்துள்ளார். அங்கு மொத்தம் 342 எம்பிக்கள் உள்ளனர். இங்கு பெரும்பான்மை பெற 172 எம்பிக்கள் தேவை.
இம்ரான் கானின் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர் என்பதால் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார்.

பாகிஸ்தானில் என்ன நடந்தது
இந்த நிலையில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்வதற்கு முன் என்ன நடந்தது.. இரவு 1 மணிக்கு அங்கு ஆட்சி கவிழ்ந்தது. சரியாக ஆட்சி கவிழ்வதற்கு 4 மணி நேரங்களுக்கு முன் பாகிஸ்தானில் என்ன நடந்தது.. இம்ரான் கான் வீட்டில் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக பாகிஸ்தான் ஊடகங்கள் மற்றும் ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், பல பரபர பின்னணி விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சாதகமான நிலை
நேற்று இரவு 8 மணி வரை இம்ரான் கானுக்கு சூழ்நிலை சாதகமாகத்தான் இருந்துள்ளதாம் . அதன்படி வாக்கெடுப்பை ஒத்திவைக்க ஏதுவான சூழ்நிலை நிலவி இருக்கிறதாம். அதோடு வெளிநாட்டு சதி இருப்பதாக இம்ரான் கான் கூறி வந்த நிலையில், அது தொடர்பான ஆதாரங்களையும், அந்த வெளிநாட்டு அரசு அனுப்பிய மிரட்டல் கடிதத்தையும் விசாரணை செய்யவும் சுப்ரீம் கோர்ட் தயாராக இருந்ததாம்.

நல்ல சூழ்நிலை
திங்கள் கிழமை இதை பற்றி விசாரிக்க கூட உச்ச நீதிமன்றம் நேரம் ஒதுக்க தயாராக இருந்திருக்கிறதாம். ஆனால் அதன்பின்தான் எல்லாம் மாறி உள்ளது. நேற்று இரவு 8 மணி அளவில் இம்ரான் கான் அந்நாட்டு ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வாவை பதவி நீக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதேபோல் துணை ஜெனெரல் பைஸ் ஹாமீத்தை அந்நாட்டு ராணுவ தளபதியாக நியமனம் செய்யவும் இம்ரான் முயன்றதாக தெரிகிறது.

பாதுகாப்பு துறைக்கு சென்ற உத்தரவு
இது தொடர்பாக அவர் பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டதாக.. அந்த நோட்டிபிகேஷன் சட்டத்துறைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. அதன்பின் இந்த உத்தரவிற்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் உள்ளே புகுந்த ராணுவ தளபதி பாஜ்வா அந்த உத்தரவு மீது சட்டத்துறை நடவடிக்கை எடுக்காமல் தடுத்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதோடு இரவு 9 மணிக்கு இந்த விஷயம் தெரிந்து பாஜ்வா மற்றும் உளவுத்துறை இயக்குனர் நதீம் அஞ்சும் (இவரின் நியமனத்தை இம்ரான் கடுமையாக எதிர்த்தார்) இருவரும் இம்ரான் கான் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம்
எங்களை எப்படி பதவியில் இருந்து நீக்க நீங்கள் முயற்சிக்கலாம் என்று ராணுவ தளபதி கேட்டதாக கூறப்படுகிறது. அங்கு கடுமையான வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. அதோடு இம்ரான் கான் உள்ளே இருக்கும் போதே அவரின் வீட்டிற்கு வெளியே ராணுவம், போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறதாம். 36 ராணுவ வாகனங்கள் அவரின் வீட்டிற்கு வெளியே குவிக்கப்பட்டு இருக்கிறதாம். இன்னொரு பக்கம் அங்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றம் இரவே விசாரணை நடத்த ரெடியாகி இருந்தது.

கோர்ட் ரெடி
இரவு நாங்கள் விசாரணை நடத்த தயார் என்று கோர்ட்டும் அறிவித்தது. தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல், நீதிபதி முனீப் அக்தர், நீதிபதி ஐஜாசுல் அஹ்சன், நீதிபதி மசார் ஆலம் மற்றும் நீதிபதி ஜமால் கான் மண்டோகேல் ஆகியோர் தலைமையிலான அமர்வு கோர்ட்டில் தயாராக காத்து இருந்தது. அதோடு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் மொத்த அமைச்சரவையையும் கைது செய்ய தயாராக போலீஸ் வாகனம் வெளியே காத்து இருந்தது.

ராஜினாமா
அதாவது இம்ரான் கான் கையில் போலீஸ் கட்டுப்பாடு இல்லாமல்.. ராணுவத்தின் கைக்கு சென்றது. 12 மணிக்குள் தீர்மானத்தை தாக்கல் செய்யவில்லை என்றால் ஒரே நேரத்தில் எல்லோரும் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதை தொடர்ந்தே 11.50 மணிக்கு அங்கு நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்பட்டது. அதற்கு முன்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் அசாத் குவைசர், துணை சபாநாயகர் குவாஸிம் கான் இருவரும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து சட்டப்படி எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவர் ஆயாஸ் சாதிக் அங்கு சபாநாயகராக பதவி ஏற்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நடத்தி வைத்தார்.

நெருக்கடி
ராணுவ தளபதியை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்று இம்ரான் திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் அதற்குள் ராணுவ தளபதி பாஜ்வா உள்ளே இறங்கி இம்ரான் கான் வீட்டிற்கே போய் அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. போலீஸ், நீதிமன்றம் எதுவும் இம்ரான் கானுக்கு ஆதரவாக இல்லாத நிலையில்தான் வேறு வழியின்றி அவர் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பிற்கு கிரீன் சிக்னல் கொடுத்து இருக்கிறார் என்கிறார்கள். அதோடு இவர் நள்ளிரவில் கைதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக ராணுவ தளபதியிடம் மன்னிப்பு கேட்டதாகவும்.. அவரின் வீட்டில் சில வருந்தத்தக்க "சம்பவங்கள்" நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது!












Click it and Unblock the Notifications