இந்தியாவின் தேசிய மொழி எது? ஸ்பெயினில் கனிமொழியை சீண்டிய நபர்.. யார் அது? பின்னணி இதுதான்
மாட்ரிட்: ‛ஆபரேஷன் சிந்தூர்' பற்றி நட்பு நாடுகளிடம் எடுத்து கூறவும், பாகிஸ்தானின் பொய் பிரசாரங்களை முறியடிக்கவும் எம்பிக்கள் குழுக்கள் வெளிநாடுகளில் பயணித்து வருகின்றன. திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு ஸ்பெயினுக்கு சென்றது. அப்போது கனிமொழி எம்பியிடம் புலம்பெயர்ந்த இந்தியர் ஒருவர், ‛‛இந்தியாவின் தேசிய மொழி எது?'' என்று கேள்வி எழுப்பியதும், அதற்கு கனிமொழி கொடுத்த பதிலும் அதிக கவனம் பெற்றது. பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றியும் எடுத்துரைக்க சென்ற கனிமொழியிடம் மொழி பிரச்சனை தொடர்பான கேள்வி கேட்டது யார்? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
‛ஆபரேஷன் சிந்தூர்' குறித்த பாகிஸ்தானின் பொய் பிரசாரங்களை முறியடிக்க 7 எம்பிக்கள் தலைமையிலான குழுக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளன. அதில் திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழுவும் ஒன்றும்.

திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழுவில் சமாஜ்வாதி எம்பி ராஜீவ் ராய், தேசிய மாநாட்டு கட்சி எம்பி மியான் அல்தாப் அகமது, பாஜக எம்பி பிரிஜேஷ் சோவ்டா, ஆர்ஜேடி கட்சியின் பிரேம் சந்த் குப்தா, ஆம்ஆத்மியின் அசோக் குமார் மிட்டல், தூதர்கள் மங்சீவ் எஸ் புரி, ஜாவேத் அஷ்ரப் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவுக்கு 5 நாடுகள் ஒதுக்கப்பட்டது. ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லத்திவா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளை கனிமொழி தலைமையிலான குழுவினர் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கனிமொழி தலைமையிலான குழுவினர் ஸ்பெயினுக்கு சென்றனர். அப்போது பாகிஸ்தானின் பயங்கரவாதம் குறித்தும், பயங்கரவாதத்துக்கு எதிரான ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றியும் கனிமொழி அந்தநாட்டின் பிரதிநிதிகளிடம் கூறினார்.
அதுமட்டுமின்றி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் புலம்பெயர் இந்தியர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இந்த வேளையில், ‛‛இந்தியாவின் தேசிய மொழி எது?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. நம் நாட்டுக்கு தேசியமொழி என்பது கிடையாது. இருப்பினும் ஒருதரப்பினர் தேசிய மொழி என்பது ‛இந்தி' என்று நம்பி வருகின்றனர். இப்படியான சூழலில் தான் கனிமொழி எம்பியிடம் இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு கனிமொழி எம்பி, ‛‛இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையிலும் ஒற்றுமையாக இருப்பது தான். இதுதான் உலகிற்கு இந்த குழு தரும் செய்தி. இதுவே இன்றைக்கு மிக முக்கியமான விஷயம்'' என்றார். பாகிஸ்தான் பயங்கரவாதம் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி ஸ்பெயின் பிரதிநிதிகளிடம் கனிமொழி எம்பி எடுத்து கூற சென்றார்.
ஆனால் அவரை டார்கெட் செய்து மொழி பிரச்சனை தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மத்திய அரசு இந்திக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறது. புதிய கல்வி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சிக்கிறது என்று தமிழக அரசு கூறி வருகிறது.
அதேபோல் கனிமொழி எம்பி உள்பட திமுகவின் பிற எம்பிக்கள் இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக நாடாளுமன்றத்தில் பேசி உள்ளனர். இப்படி இந்தி மொழி விவகாரத்தில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் என்பது தொடர்ந்து வரும் சூழலில் கனிமொழியை குறிவைத்து இந்திய புலம்பெயர் ஸ்பெயின் வாழ் நபர் இந்த கேள்வியை கேட்டுள்ளார்.
இதன்மூலம் கனிமொழியை சிக்கலில் சிக்க வைக்க அந்த நபர் நினைத்தார். இந்தி மொழி குறித்த கனிமொழி ஏதாவது கூறி அவரை சர்ச்சையில் சிக்க வைக்கலாம் என்பது அந்த நபரின் நோக்கமாக கூட இருந்திருக்கலாம். ஆனால் கனிமொழி சாதுர்யமாக பதிலளித்து வேற்றுமையிலும் ஒற்றுமையாக இருப்பது என்று பதிலளித்து அனைவரையும் கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications