"நான் மட்டும் வாயை திறந்தால்.. அவ்வளவுதான்.!" பாக். உளவு அமைப்பை ஓப்பனாக எச்சரிக்கும் இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டின் உளவு அமைப்பிற்கு ஓப்பனாக எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2020 வரை பிரதமர் பதவியில் இருந்தார். அப்போது ஆளும் கூட்டணிக்குள் எதிர்ப்பு அதிகரித்தது.
இதன் காரணமாக இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இருந்த போதிலும், வெளிநாட்டுச் சூழ்ச்சி காரணமாகவே தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக இம்ரான் கான் கூறி வருகிறார்.

பாகிஸ்தான்
மேலும், இப்போது இருக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் எதிராகத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார். அப்படித்தான் அவர் சமீபத்தில் லாகூரில் போராட்டம் நடத்தினார். பாகிஸ்தானில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் போராட்டம் நடத்தினார். அதன் பின்னர் பொதுக் கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், பாகிஸ்தானுக்குக் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அமைதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

போராட்டம்
லாகூரில் பேசிய இம்ரான் கான், "நான் தனிப்பட்ட நலனுக்காக இந்த போராட்டத்தை நடத்தவில்லை. பாக். மக்கள் உண்மையான சுதந்திரத்தைப் பெறுவதற்காகவும், சரியான முடிவு எடுக்கப்படுவதை உறுதி செய்யவே தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறேன். நமது நாட்டு முடிவுகள் எல்லாம் இங்கு தான் எடுக்க வேண்டும். பிரிட்டன், அமெரிக்காவில் இருப்பவர்கள் நமது நாட்டில் என்ன நடக்கும் என்பதை முடிவு செய்யக் கூடாது.

அமைதியா இருக்கிறேன்
பாகிஸ்தானுக்கு முழு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே நோக்கம். நான் இப்போதும் அமைதியாக இருக்கிறேன். நமது நாட்டின் நலனுக்காகவும் பாகிஸ்தான் உளவு அமைப்புகளின் கவுரவத்தைக் காக்கவும் மட்டுமே நான் அமைதியாக இருக்கிறேன். நான் ஒரு போதும் எனது நாட்டை காயப்படுத்தும் வகையில் எதையும் செய்ய மாட்டேன். இது தான் எனது தாய் நாடு.. நான் எங்கும் ஓடிவிட மாட்டேன். கடைசி வரை இங்கு தான் இருப்பேன்.

திருடர்கள்
இந்த அரசு திருடுபவர்களையும் அவர்களுக்குத் துணையாக இருப்பவர்களையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறது. மக்கள் தேசத்திற்காக என்ன தியாகத்தை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால், இந்த திருடர்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். யார் எப்படி மிரட்டினாலும் எங்கள் போராட்டம் தொடரும். சட்டத்தை புறந்தள்ளும் செயல்களில் ஈடுபட மாட்டோம்" என்றார்.

போராட்டம்
இம்ரான் கான் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார். கடந்த மே 25இல் நடந்த போராட்டத்தின் போது உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்றாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர் உச்ச நீதிமன்ற முற்றுகை போராட்டத்தையும் அறிவித்து உள்ளார். பாதுகாப்பு மண்டலங்களில் அத்துமீறி நுழைய மாட்டோம் என்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இம்ரான் கான்
நாடு முழுக்க போராட்டங்களை நடத்தி வரும் இம்ரான் கான், வரும் நவ. 4இல் தலைநகர் இஸ்லாமாபாத்தை முற்றுகையிட உள்ளதாக அறிவித்து உள்ளார். இருந்த போதிலும், இந்த போராட்டத்தை ஆளும் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. மக்களை ஏமாற்றவே இம்ரான் கான் இப்படிச் செய்து வருவதாகவும் மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் என்றும் ஆளும் தரப்பு சாடியுள்ளது.












Click it and Unblock the Notifications