ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது?
இஸ்லாமாபாத்: இஸ்ரேல் மீது ஈரான் தீவிர ராணுவ தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்கள் நடந்து வருகிறது. பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. ஆனால் இந்த போருக்கு எதிராக வளைகுடா நாடுகளில் அதிருப்தி அதிகரித்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளுக்கு பதில், மூலம் பாகிஸ்தான் மூலம் ஈரானுடன் தொடர்பு கொண்டு அமெரிக்கா பேச்சுவார்த்தை முயற்சிகளை தொடங்கி உள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிகிறது.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தின. ஈரானின் முக்கிய நகரங்கள் மற்றும் எண்ணெய் வளம் மிக்க தீவுகளை அமெரிக்கா தாக்கியது. பதிலுகு வளைகுடா பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதல்களில் ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

பிற நாடுகளில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளார்கள். இது ஒருபுறம் எனில், ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதனால் அமெரிக்கா கடுமையான சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்கா மட்டுமல்ல.. அதன் நட்பு நாடுகளான வளைகுடா நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆசிய நாடுகளான இந்தியா, ஜப்பான் தென்கொரியா போன்ற நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
டிரம்ப் எச்சரிக்கை
இதனால் தேன் கூட்டில் கைவைத்ததை உணர்ந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் அங்குள்ள எரிசக்தி அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், மின்சார அமைப்புகள், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என தெரிவித்தது.
போர் ஒத்திவைப்பு
இதனால், வேறுவழியின்றி, ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்தார். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் டிரம்ப் கூறினார். ஆனால், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபாப், அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என மறுத்தார். "அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்களின் சிக்கலிலிருந்து தப்பிக்க போலி தகவல்களை பரப்புகின்றன" என்று கூறினார். அதேநேரம் பதற்றத்தை குறைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரான் விளக்கம் அளித்தது.
டெல் அவிவ் மீது தாக்குதல்
இதனிடையே நேற்று, இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவை குறிவைத்து ஈரான் இடைவிடாமல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததுடன், பொதுமக்கள் பாதுகாப்பு இடங்களுக்கு ஓடினர். இந்த தாக்குதலில் பல அடுக்குமாடி கட்டடங்கள் சேதமடைந்ததுடன், 6 பேர் காயமடைந்தனர். இதனால் கோபமடைந்த இஸ்ரேல் விமானப்படை, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் உளவுத்துறை தொடர்பான அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் உதவி
போர் உக்கிரமாக நடப்பதால், மத்தியஸ்த நாடுகள் மூலம் ஈரானுடன் தொடர்பு கொண்டு அமெரிக்கா பேச்சுவார்த்தை முயற்சிகளை தீவிரமாக்கி உள்ளது. அதேநேரம் வளைகுடா நாடுகள் இந்த போருக்கு எதிராக அதிருப்தியில் உள்ளன. இதனால் வளைகுடா நாடுகளுக்கு பதில் அமெரிக்கா, தனது நட்பு நாடான பாகிஸ்தானின் உதவியை நாடி வருகிறது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசி, அமைதி பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்புகளை ஆராய்ந்திருக்கிறார்.
அமெரிக்க மாப்பிள்ளை
மேலும், டிரம்ப் தனது சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் மூலமாக ஈரான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறார். விரைவில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்டோர் ஈரான் அதிகாரிகளை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications