ரூ.3.5 லட்சம் கோடி.. மோதல் 12 நாள் மட்டுமே நீடித்தாலும் இழப்பு ரொம்ப பெரிசு! யாருக்கு நஷ்டம் அதிகம்?
டெல் அவிவ்: தொழில்நுட்ப வளர்ச்சியும், அதிநவீன ஆயுதங்களும் நிறைந்த 21ம் நூற்றாண்டில் போர்கள் பேரழிவை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதிகச் செலவு வைக்கும் வகையில் மாறிவிட்டன. இஸ்ரேல் ஈரான் போரில் அமெரிக்கா வந்ததால் 12 நாட்களில் அது முடிவுக்கு வந்தது. இருந்த போதிலும் இந்தப் போரால் மூன்று நாடுகளுக்குமே மிகப் பெரிய செலவு தான். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் கடந்த ஜூன் 15ம் தேதி தொடங்கியது. முதலில் ஈரான் மீதான உள்கட்டமைப்புகளில் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. இந்தப் போர் 12 நாட்களுக்கு நடந்தது. அமெரிக்கா உள்ளே வந்த ஈரானின் அணு ஆயுதத் தளங்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், மோதல் மெல்ல முடிவுக்கு வந்தது.

பொருளாதார இழப்பு
இந்த மோதல் வெறும் 12 நாட்கள் மட்டுமே நீடித்த போதிலும், இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்குப் பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட்டன. இந்த இழப்புகள் பல பில்லியன் டாலர்களை தாண்டிப் போய்விட்டது. இந்த மோதல் இரண்டு நாடுகளிலும் உள்கட்டமைப்பைத் தகர்த்தது மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வளர்ச்சிப் பாதையில் இருந்த இரண்டு நாடுகளும் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளன.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரான் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிலையில், போர் மேலும் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் இந்த மோதலில் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 6-9 சதவீதம் வரை இழந்துள்ளதாகச் சில மதிப்பீடுகள் கூறுகின்றன.
ஈரான்
ஈரானுக்கும் இந்த மோதலால் நேரடி மற்றும் மறைமுகமாகச் சுமார் 24 முதல் 35 பில்லியன் டாலர்கள் வரை இழப்பு இருக்கும் என்கிறார் பாதுகாப்பு ஆய்வாளர் க்ரீக்.. மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஈரானின் அணு உள்கட்டமைப்பைப் பாதித்துள்ளன. இதனால், ஈரான் தனது முழு பலத்தை மீட்டெடுக்கச் சிறிது ஆண்டுகள் வரை கூட ஆகலாம். எரிசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் குறைக்கும். ஏனெனில் ஈரான் எண்ணெய் ஏற்றுமதியைப் பெரிதும் நம்பியுள்ளது.
ஈரானிய ஏவுகணைகளால் இஸ்ரேலுக்கு 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக ப்ளும்பெர்க் இதழ் கூறுகிறது. மேலும், மோதலால் பாதிக்கப்பட்ட தனியார் சொத்துகளுக்கும் இஸ்ரேல் தனியாக இழப்பீடு வழங்க வேண்டி இருக்கிறது. இப்போது மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல் வரலாற்றில் இதற்கு முன்பு இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டதில்லை என்றார் இஸ்ரேலில் இழப்பீடு வழங்கும் பொறுப்பாளரான ஷாய் அஹரோனோவிச். இன்னும் சில மதிப்பீடுகளில் போரால் இஸ்ரேலுக்கு 6 மில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படலாம் எனச் சொல்லப்படுகிறது.
இஸ்ரேல்
அதிகரித்து வரும் பட்ஜெட் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் இஸ்ரேல் அரசு செலவுகளைக் குறைப்பது மட்டுமின்றி, வரிகளையும் உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும், கூடுதலாகக் கடன் வாங்கவும் பிளான் செய்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 75% க்கு மேல் அதிகரிக்கக்கூடும். பாதுகாப்புக்காக 857 மில்லியன் டாலர் அவசரமாக நிதி ஒதுக்குமாறு கோரப்பட்டுள்ளது.. மறுபுறம் சுகாதாரம், கல்வி, சமூக நலன் போன்ற முக்கியமான துறைகளில் 200 மில்லியன் டாலர் வரை செலவுகளைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.. இந்த முடிவுக்குப் பொதுமக்களிடையே கடும் விமர்சனங்கள் பெற்றுள்ளது.
மேலும், இஸ்ரேலிய அரசு யூதக் குடிமக்கள் வெளிநாடு செல்லத் தடை விதித்துள்ளது. இது அதிகரித்து வரும் மக்கள் மற்றும் மூலதன வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகப் பரவலாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா
இது இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் தான் என்றாலும் இதில் அமெரிக்காவும் உள்ளே வந்தது. "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" என்ற பெயரில் இஸ்ரேல் நாட்டில் உள்ள அணு ஆயுதத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்காக அமெரிக்காவிற்குச் சுமார் 1-2 பில்லியன் டாலர்கள் செலவாகி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா 125 போர் விமானங்கள், டொமாஹாக் ஏவுகணைகள் மற்றும் பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகள் மூலம் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் போன்ற முக்கிய ஈரானிய அணு உலைகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிட்டது.
ஒட்டுமொத்தமாக மூன்று நாடுகளுக்கும் சேர்த்து 36-41 பில்லியன் (ரூபாய் மதிப்பில் 3 லட்சம் கோடி- 3.5 லட்சம் கோடி) வரை செலவாகியிருக்கலாம். அதேநேரம் இது ஆரம்பக்கட்ட மதிப்பீடுதான். 12 நாள் மோதலில் உண்மையான செலவு குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. இருப்பினும், இந்த மோதல் ஈரான் மட்டுமின்றி இஸ்ரேலுக்கும் மிகப் பெரிய பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது என்பது தெளிவாகிறது.
நஷ்டம்
ஒரு பக்கம் ஏற்கனவே பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான், இப்போது மேலும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம் இஸ்ரேலும் தனது வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது. இதனால் முக்கிய துறைகளில் செலவுகளைக் குறைக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இது உள்நாட்டில் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications