வெளிநாட்டு மாணவர்களை குறிவைத்து தாக்குதல்! "இந்தியர்களுக்கு அலர்ட்.." கிர்கிஸ்தானில் என்ன நடக்கிறது?
பிஷ்கெக்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் திடீரென வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து வன்முறை ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்.. எதனால் திடீரென வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து வன்முறை ஏற்பட்டுள்ளது என்பது குறித்துப் பார்க்கலாம்.
மத்திய ஆசியாவில் அமைந்துள்ள கிர்கிஸ்தானில் இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் அதிகம் உள்ளனர். இதற்கிடையே கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து திடீரென வன்முறை வெடித்துள்ளது.

இதனால் அங்குப் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கிர்கிஸ்தானில் என்ன நடக்கிறது.. இந்த வனத்துறைக்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்..
வன்முறை: கிர்கிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் மாணவர்களுக்கு எதிராக பல்வேறு பல வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கும்படி அந்நாட்டு மாணவர்களுக்குப் பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிர்கிஸ்தான் நாட்டை சேர்ந்த பல நூறு பேர் இணைந்து அங்கு இந்திய, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகளைக் குறிவைத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வரத் தலைநகர் பிஷ்கெக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் மக்களுக்கும் மற்றும் வெளிநாட்டினருக்கு இடையே நடந்ததாகக் கூறப்படும் மோதலை தொடர்ந்து இந்த வன்முறை வெடித்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
நிலைமை என்ன: அதில் ஒரு கும்பல் ஹாஸ்டல் கதவுகளை உடைத்து சர்வதேச மாணவர்களை அடித்துத் தாக்குவது தெரிகிறது. இந்தச் சம்பவத்தால் பாகிஸ்தான் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் தங்கள் மாணவர்களுக்கு உதவ அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் மாணவர்கள் சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பல மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் தகவல் பரவுகிறது. இருப்பினும், இதை பாக். அரசு உறுதி செய்யவில்லை.
என்ன காரணம்: கடந்த மே 13ஆம் தேதி கிர்கிஸ்தான் மாணவர்களுக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான், எகிப்திய மாணவர்கள் மற்றும் உள்ளூர் மாணவர்கள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அங்குப் பதற்றம் அதிகரித்தது.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் உள்ளூர் மாணவர்களை எப்படித் தாக்கலாம் என சமூக வலைத்தளங்களில் பலரும் கொந்தளித்தனர்.. மேலும் சண்டையில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டவர்களுக்கு எதிராக அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிர்கிஸ்தான் மக்கள் ஆவேசமடைந்தனர். இதன் காரணமாகவே வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதல்: இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மாணவர்கள் தங்கியிருந்த பல்கலைக்கழக விடுதிகளைக் குறிவைத்து அந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாகவே மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என்றும் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படியும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தூதரகங்கள் அறிவுறுத்தியுள்ளன.
இந்தியர்கள் கிர்கிஸ்தான் செல்ல என்ன காரணம்: இப்போது கிர்கிஸ்தானில் சுமார் 15,000 இந்திய மாணவர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களில் எத்தனை பேர் வன்முறை நடக்கும் தலைநகர் பிஷ்கெக்கில் உள்ளனர் என்பது உடனடியாக தெரியவில்லை. மருத்துவம் படிக்க இந்திய மாணவர்கள் செல்லும் முக்கிய நாடுகள் லிஸ்டில் ரஷ்யா, உக்ரைன் உடன் இந்த கிர்கிஸ்தானும் உள்ளது.
அங்கு மருத்துவம் படிக்கச் செலவு குறைவு.. மேலும், மருத்துவ கல்வித் தரமும் சிறப்பாக இருப்பதால் பலரும் கிர்கிஸ்தான் செல்ல விரும்புகிறார்கள். கிர்கிஸ்தான் வழங்கும் மருத்துவ பட்டங்கள் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications