காணாமல் போன அமைதி.. திடீரென இந்தியாவுக்கு எதிராக ஆவேசம் காட்டும் மாலத்தீவு அதிபர்.. என்ன தான் காரணம்
மாலே: இந்தியா மாலத்தீவு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், திடீரென மாலத்தீவு அதிபர் இந்தியாவுக்கு எதிராக கடுமையாக நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளார். இதற்கான காரணங்களை நாம் பார்க்கலாம்.
இந்தியா மாலத்தீவு இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், மாலத்தீவில் உள்ள படைகளை வரும் மார்ச் 15ஆம் தேதிக்குள் இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில காலமாகவே இந்தியா மாலத்தீவு இடையேயான உறவு கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்கான காரணம் என்ன.. இப்போது இந்த அறிவிப்பு வர என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியா மாலத்தீவு உறவு: இப்போது மாலத்தீவில் 88 இந்திய வீரர்கள் உள்ளனர். இந்தியா மாலத்தீவு இடையே கடந்த 2010இல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியப் படைகள் மாலத்தீவில் நிறுத்தப்பட்டன. மருத்துவம் தொடங்கிப் பல வழிகளில் அங்குள்ள மக்களுக்கு இந்தியா உதவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இத்தனை ஆண்டுகளாக இருந்த நல்லுறவு கடந்த சில காலமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு முன்பு மாலத்தீவு அதிபராக இருந்தவர் இந்தியா சார்பு நிலைப்பாட்டை எடுத்திருந்தார். ஆனால், தற்போதைய அதிபர் முய்ஸு இந்தியா சார்பு நிலைப்பாட்டில் இருந்து விலகி சீனா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அவர் தனது பிரச்சாரத்திலேயே "இந்தியா அவுட்" என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தார். தற்போதைய அதிபர் முய்ஸு சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராகவே இருக்கிறார்.
கெடு விதிப்பு: இந்தச் சூழலில் தான் அவர் இந்தியா ராணுவத்தை வெளியேறக் கெடு விதித்துள்ளார். மாலத்தீவில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள இரண்டு ராணுவ துருவ் அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர்களை இந்தியா மாலத்தீவுக்குப் பரிசாக அனுப்பி இருந்தது. இந்த விவகாரத்தில் கடந்த 2021இல் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதன் பின்னர் அந்த ஹெலிகாப்டர்களை பராமரிக்கவும் இயக்கவும் இந்திய ராணுவம் அங்கே இருந்தது.
இருப்பினும், இதை அனுமதித்தால் இந்திய ராணுவம் அங்கே தனது கடற்படை அமைக்கும் என்ற விமர்சனங்களும் எழுந்தன. இதையே தான் தேர்தல் சமயத்திலும் முய்ஸு தனது பிரச்சாரத்தில் முன்னெடுத்து வெற்றி பெற்றார். இப்படிப்பட்ட நேரத்தில் தான் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் தொடர்பாக மாலத்தீவு அமைச்சர் சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்தனர் இதுவே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவைக் கடுமையாகப் பாதித்தது.
சீன பயணம்: மேலும், மாலத்தீவு அதிபர் முய்ஸு சமீபத்தில் தான் சீனாவுக்குச் சென்று திரும்பினார். இந்தியப் பெருங்கடலில் அதன் இருப்பை அதிகரிக்க மாலத்தீவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தச் சீனா திட்டம் போடுகிறது.
சீனாவுக்குச் செல்லும் எண்ணெய்யில் சுமார் 80 சதவிகிதம் மாலத்தீவு அருகே தான் செல்கிறது. இதன் காரணமாகவே மாலத்தீவைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரச் சீனா விரும்புகிறது. முய்ஸு சீனா சென்ற போது 20 முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. அவர் சீனாவில் இருந்து திரும்பிய சில நாட்களிலேயே இந்திய ராணுவத்தை வெளியேறிய உத்தரவிட்டுள்ளார். இதையும் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முய்ஸு: சீனாவில் இருக்கும் இந்திய ராணுவத்தை வெளியேற்ற முய்ஸு உத்தரவிட்டுள்ள போதிலும், இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் எந்தவொரு கருத்துகளையும் கூறவில்லை. சீனாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து வருவது இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவுக்குச் சிக்கலைத் தரலாம். என்பதே இப்போது வல்லுநர்களின் எச்சரிக்கையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications