"நம்பர் 92.." யுரேனியத்திற்காக உலகம் ஏன் சண்டையிடுகிறது? ஆக்கவும் முடியும்.. அழிக்கவும் முடியும்!
டெல்லி: நம்ம கெமிஸ்ட்ரி புத்தகத்திற்கும், உலக நாடுகளுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தத்திற்கும் இடையில் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய ஒரே தனிமம் என்றால் அது யுரேனியம் தான். உலக நாடுகளே இந்த யுரேனியத்திற்காக தான் சண்டையிட்டு வருகிறது. இது குறித்து நாம் முழுமையாகத் தெரிந்து கொள்ள அதன் அபாயகரமான பிம்பத்தைத் தாண்டி, ஏன் இது இவ்வளவு சக்திவாய்ந்ததாக உள்ளது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
அடிப்படையில் யுரேனியம் என்பது ஒரு கனமான, வெள்ளி போன்ற கலர் இருக்கும் ஒரு உலோகமாகும். அறிவியல் உலகில் இது அதன் அணு எண்: 92 (Atomic Number: 92) மூலம் வரையறுக்கப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு யுரேனியம் அணுவிலும் 92 புரோட்டான்கள் அதன் உட்கருவில், அதாவது Nucleusஇல் இருக்கும்.

இது 1789-ஆம் ஆண்டு ஜெர்மன் வேதியியலாளர் மார்ட்டின் ஹென்றிச் கிளாப்ரோத் என்பவரால் கண்டறியப்பட்டது. இதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்புதான் 'யுரேனஸ்' கோள் கண்டறியப்பட்டதால், அதன் நினைவாக இதற்கு யுரேனியம் எனப் பெயரிட்டார்.
கதிரியக்கத் தன்மை
நம் நட்பு வட்டாரத்தில் எப்போதும் ஊருக்குச் செல்லும்போது தேவைக்கு அதிகமாக பேக் செய்யும் ஒருவர் இருப்பார்.. அவரது பெட்டியின் ஜிப், எப்போது வேண்டும் என்றாலும் திறக்கும்.. உள்ளே இருக்கும் ஆடைகள் விழும் என்ற நிலை இருக்கும்.. கிட்டத்தட்ட அதுபோன்ற ஒரு நிலை தான் யுரேனியத்திற்கும்.! அதன் உட்கருவும் அவ்வளவு பெரியது மற்றும் கனமானது என்பதால் அது நிலையற்றதாக இருக்கிறது. நிலைத்தன்மையை அடைவதற்காக, அது தொடர்ந்து சிறு சிறு எனர்ஜி மற்றும் துகள்களையும் (particles) வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது. இப்படி உபரி ஆற்றலை வெளியேற்றும் இந்தச் செயல்பாட்டையே தான் நாம் "கதிரியக்கம்", அதாவது Radioactivity என்கிறோம்.

எங்கிருந்து கிடைக்கிறது?
யுரேனியம் நீங்கள் நினைப்பது போல அவ்வளவு அரிதான ஒன்றல்ல.. இது தங்கம் அல்லது வெள்ளியை விடவும் அதிக அளவில் கிடைக்கக்கூடியது. மண், பாறை மற்றும் நீரிலும் கூட இது கிடைக்கும். ஆனால், அதன் செறிவுத்தன்மை குறைவாக இருக்கும். சர்வதேச அளவில் பார்க்கும்போது, கஜகஸ்தான் , கனடா, ஆஸ்திரேலியா, நமீபியா, ரஷ்யா நாடுகளில் யுரேனியம் அதிகம் கிடைக்கும். இது மற்ற உலோகங்களைப் போலவே சுரங்கங்கள் மூலம் வெட்டி எடுக்கப்படுகிறது. சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும் யுரேனியத் தாதுவைச் சுத்திகரித்து, தூளாக மாற்றும்போது அது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனால் இதனை 'யெல்லோ கேக்' என்று அழைப்பார்கள்.

இயற்கை யுரேனியம் பெரும்பாலும் U-238 (நிலையானது ஆனால் பெரியளவில் ரியாக்ட் செய்யாது) ஆகவே இருக்கும்.. மிகச்சிறிய அளவில் மட்டுமே U-235ஆக கிடைக்கும்.. இந்த U-235 தான் வெடிப்புகளை நிகழ்த்தும் பண்புகளைக் கொண்டவை.. இதனால் நமக்குக் கிடைக்கும் யுரேனியங்களில் U-235இன் சதவீதத்தை நாம் அதிகரிக்க வேண்டும். இதுவே "செறிவூட்டல்", அதாவது ஆங்கிலத்தில் Enrichment என்று அழைக்கப்படுகிறது.
செறிவூட்டல் எப்படி?
U-235 ஆனது U-238ஐ விடச் சற்று எடை குறைவானது.. இதனால் யுரேனியத்தை வாயுவாக மாற்றி, 'சென்ட்ரிஃப்யூஜ்' (Centrifuges) எனப்படும் உயரமான குழாய்களில் அதிவேகமாகச் சுற்ற வைப்போம். அப்போது அதிக எடையுள்ள U-238 சுவர்களில் தள்ளப்படும்.. எடை குறைந்த U-235 மையப்பகுதியில் தங்கிவிடுகிறது. இதைத் தான் செறிவூட்டர் பிராசஸ் என்கிறோம்.

செயின் ரியாக்ஷன் என்றால் என்ன?
ஒரு அணு உலையில் , ஒரு நியூட்ரானை கொண்டு யுரேனியம் அணுவைத் தாக்குவோம். அந்த அணு இரண்டாகப் பிளந்து (Fission), பெருமளவிலான வெப்பத்தையும் வெளியிடும். அத்தோடு பல நியூட்ரான்களையும் அது வெளியிடுகிறது. அந்தப் புதிய நியூட்ரான்கள் மற்ற அணுக்களைத் தாக்கி, அவற்றையும் பிளக்கச் செய்கின்றன. இதுவே செயின் ரியாக்ஷன் எனப்படும்.
அணு மின் உற்பத்தி நிலையத்தில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இந்த செயின் ரியாக்ஷன் நடத்தப்படும்.. அங்குள்ள கண்ட்ரோல் ராட்கள் உபரி நியூட்ரான்களை உறிஞ்சிவிடும். இதனால் அது அணுகுண்டுகளை போல வெடித்துச் சிதறாது.. இதனால் ரியாக்ஷன் சீராகத் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தியாகிறது. இதில் கவனிகக் வேண்டியது என்னவென்றால் இந்த ஒட்டுமொத்த பிராசஸும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் நடந்து முடியும்.
எனவே, யுரேனியத்தின் செறிவூட்டல் ரொம்பவே முக்கியம்.. சாதாரண மின்விளக்குகளுக்கு மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அதே யுரேனியம் அணு குண்டுகளுக்கும் பயன்படும் என்பதால் உலக நாடுகள் இதைக் கூர்ந்து கவனிக்கிறது. இது அனைத்தும் அதன் தூய்மை அளவை, அதாவது செறிவூட்டல் நிலையைப் பொறுத்தே அமைகிறது:

இந்த அணுசக்தி கேமில் யுரேனியம் மட்டுமின்றி, புளூட்டோனியம் (94), தோரியம் (90) உள்ளிட்டவையும் பயன்படுத்தப்படும்.
புவிசார் அரசியல்
யுரேனியம் என்பது ஒரு நாட்டின் அதிகாரத்தின் ஆதாரம். ஒரு நாடு யுரேனியத்தையும் அதைச் செறிவூட்டும் திறனையும் பெற்றிருந்தால், அந்த நாட்டிற்கு புவிசார் அரசியலில் ஒரு கண்ட்ரோல் கிடைக்கும்.. இதன் மூலம் ஓவர்நைட்டில் கூட முக்கிய சக்தியாக மாற முடியும்.. இருப்பினும், இது தவறான நபர்கள் கைகளுக்குச் சென்றால் பேரழிவு ஏற்படும் என்பதற்காகவே இதைக் கண்காணிக்க IAEA எனப்படும் சர்வதேச அணுசக்தி முகமை உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகெங்கும் உள்ள ஆய்வகங்களை ஆய்வு செய்யும்.. உலக நாடுகளிடம் உள்ள யுரேனியம் கையிருப்பைக் கண்காணிக்கும்.. யுரேனியம் மின்சாரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறதா அல்லது அணு ஆயுதங்களுக்கா என்பதை இது உறுதி செய்கிறது.

சர்வதேச அளவில் இப்போது வடகொரியா தனது செறிவூட்டல் பணிகளை வேமகாக மேற்கொண்டு வருகிறது. வடகொரியா தனது யோங்பியோன் (Yongbyon) அணுசக்தி நிலையத்தை விரிவுபடுத்தி வருவதாக IAEA கூறுகிறது. தங்களது யுரேனியம் செறிவூட்டும் திறனை அதிகரிப்பதன் மூலம், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளனர். இது வடகொரியாவையே ஒரு வெடிமருந்துக் கிடங்காக மாற்றும் ஆபத்து இருக்கிறது.
ஈரான்
ஈரானின் நிலைமை இப்போது ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. 2025-இல் மீண்டும் ஐநா தடைகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்பஹான் (Isfahan) மற்றும் ஃபோர்டோ (Fordow) போன்ற முக்கிய இடங்களுக்குச் சர்வதேச ஆய்வாளர்கள் செல்வதை ஈரான் தடுத்துள்ளன. ஈரானிடம் 60% வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இது இன்னும் ஆயுதத் தரம்(90%) இல்லை என்றாலும், சீக்கிரம் அந்த தரத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என உலக நாடுகள் அஞ்சுகின்றன. இப்போது வளைகுடாவில் நடந்து வரும் மோதல்களும் கூட இதை மையப்படுத்தியே உள்ளது.

யுரேனியம் என்பது ஒரு அதிசயம் மற்றும் ஆபத்து ஆகிய இரண்டும் கலந்தது. பூமி மாசு அடைவதைத் தடுத்து கார்பன் இல்லாத எனர்ஜியை இது வழங்க முடியும்.. அதேநேரம் நாகரிகத்தையே அழிக்கும் கருவியாகவும் மாற முடியும். அதனால் தான் மனித வரலாற்றிலேயே அரசியல் ரீதியாக மிகவும் உற்றுக் கவனிக்கப்படும் தனிமமாக இது இன்றும் நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications