மீண்டும் "பிரிவினை.." வார்த்தையை விட்ட இம்ரான் கான்.. பரபரக்கும் பாகிஸ்தான்! என்ன சொன்னார்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இப்போது குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் பிரிவினை ஏற்படும் ஆபத்து உள்ளதாக இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானில் இப்போது ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான் கான் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகிறார். கடந்தாண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்தே அவர் போராட்டங்களை ஆரம்பித்துவிட்டார்.
இடையில் ஒரு பிரச்சார கூட்டத்தில் பேசும் போது, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், அவர் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தியே வந்தார். அவருக்கான ஆதரவும் தொடர்ந்து அதிகரித்தே வந்தது.

அதிலும் சமீபத்தில் அவரை பாகிஸ்தான் ராணுவம் நீதிமன்ற வளாகத்திற்குச் சென்று கைது செய்த போது, நாடு முழுக்க அவருக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்றது. சில இடங்களில் மோசமான வன்முறையும் கூட ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இந்தச் சூழலில் தான் அவர் கைது செய்யப்பட்டு இரண்டே நாட்களில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இம்ரான் கான்: இதனிடையே இப்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இம்ரான் கான் அதில் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் இம்ரான் கான், பாகிஸ்தான் ஒரு பேரழிவை நோக்கிச் செல்கிறது என்றும் இதனால் பாகிஸ்தான் சிதைவு அதாவது பிரிவினையை எதிர்கொள்ளக்கூடும் என்று எச்சரித்துள்ளார், ஆளும் கூட்டணி அரசு தனது கட்சிக்கு எதிராக ராணுவத்தை இறக்கிவிட்டு சதி செய்வதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
அரசியல் ஸ்திரமின்மையை முடிவுக்குக் கொண்டுவரத் தேர்தலை நடத்துவது மட்டுமே ஒரே தீர்வு என்றும் 70 வயதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இப்போது லண்டனில் இருக்கும் நவாஸ் ஷெரீப்பும், அவரது சகோதரரும் இப்போதைய பிரதமருமான ஷெரீப் நாட்டின் அரசியலமைப்பு அவமதிக்கப்படுவது. அரசு அமைப்புகள் அழிக்கப்படுவது, பாகிஸ்தான் ராணுவத்திற்குக் கெட்ட பெயர் வருவது குறித்து சிறிதும் கவலைப்படவில்லை.
நோக்கம்: கொள்ளையடித்த செல்வத்தைச் சேமிப்பதில் மட்டுமே அவர்களுக்குக் கவனம் இருக்கிறது. நாடு ஒரு பேரழிவை நோக்கிச் செல்கிறது. தேர்தலை நடத்தி நாட்டைக் காப்பாற்றுமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இப்போதும் போலீசார் எனது வீட்டை சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள். எனது கைதின் போது நடந்த போராட்டங்களை வன்முறைகளாகச் சித்தரிக்க அவர்கள் முயல்கிறார்கள். இது நன்கு திட்டமிடப்பட்ட சதி.
இந்த நிலையைச் சரி செய்ய நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கிழக்கு பாகிஸ்தான் போன்ற ஒரு சூழலை டு எதிர்கொள்ளும் ஆபத்து இருக்கிறது. புத்திசாலித்தனமாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது" என்றார்.

பிரிவினை: தற்போதைய வங்கதேசம், கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது. இருப்பினும், அவர்கள் தனி நாடு கோரி போராடி வங்கதேசத்தைப் பெற்றனர். மீண்டும் அதேபோன்ற ஒரு பிரிவினை ஏற்பட ஆபத்து உள்ளதாகவே இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து அந்நாட்டு ராணுவம் குறித்துப் பேசிய அவர், "நான் ராணுவத்தைக் கண்டிக்கும்போது, அது எனது குழந்தைகளை விமர்சிப்பது போல்தான் எனக்கு உள்ளது.. அரச நிறுவனங்களின் உள் விவகாரங்களில் நான் தலையிட மாட்டேன் என்று நான் பலமுறை கூறி வருகிறேன். ராணுவத் தளபதி எனக்கு எதிராகச் சதி செய்கிறார் என்று உறுதியான தகவல் வந்த போதும் நான் தலையிடவில்லை" என்றார்.
இம்ரான் கான் வீட்டில் 40 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறும் நிலையில், அதற்குப் பதில் சொன்ன அவர், "பயங்கரவாதிகளால் எனது உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. எனவே, போலீசார் உரிய வாரண்டைப் பெற்று வீட்டை சட்டப்பூர்வமான முறையில் சோதனை செய்ய வேண்டும். ஆனால், இப்போதைய அரசு அதைச் செய்வதில்லை. என்னை ஒடக்கிவிட வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
பாகிஸ்தானின் 70 சதவீத மக்கள் எங்கள் கட்சியுடன் பி.டி.ஐ.யுடன் நிற்கிறார்கள். மீதமுள்ள 30 சதவீதம் பேர் மட்டுமே ஆளும் தரப்பிற்கு ஆதரவாக உள்ளனர். எனது வீட்டில் பயங்கரவாதிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள், ஊடகத்தினர் எப்போது வேண்டுமானாலும் வீட்டில் வந்து என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications