"பாலியல் உறவு.. " ஓப்பனாக பேசிய போப் பிரான்சிஸ்.. ஆர்வமாக கேட்ட இளைஞர்கள்! சொன்ன பதில் என்ன தெரியுமா
வாடிக்கன்: ஆவணப் படம் ஒன்றில் போப் பிரான்சிஸ் பேசியிருந்த பேச்சு இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அவர் பாலியல் உறவு, கருக்கலைப்பு ஆகியவை குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
ஐரோப்பாவில் உள்ள வாடிகன் கிறிஸ்தவ மதத்தின் தலைமையாகக் கருதப்படுகிறது. உலகின் மிகச் சிறிய நாடு என்ற போதிலும், கிறிஸ்தவ மதத்தின் தலைமை அதுதான். இந்த வாடிகனில் தான் போப் ஆண்டவர் இருப்பார்.

இப்போது போப்பாக இருக்கும் பிரான்சிசுக்கு வயது 86. அவருக்குச் சமீபத்தில் தான் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. சுவாச நோய்த்தொற்று காரணமாகக் கடந்த மாத இறுதியில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருக்கு மோசமான பாதிப்பு எதுவும் இல்லாத நிலையில், அவர் சில நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியிருந்தார். இதனிடையே செக்ஸ் குறித்து அவரது பேச்சு ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. டிஸ்னி தயாரித்துள்ள "தி போப் ஆன்சர்ஸ்" ஆவணப்படத்தில் தான் இந்த பேச்சு இடம் பெற்றுள்ளது. கடந்தாண்டு போப் பிரான்சிஸ் ரோமில் 20 வயதிற்குட்பட்ட 10 பேருடன் மீட்டிங் நடத்தியிருந்தார். அதை வைத்தே இந்த ஆவணப்படத்தை அவர்கள் எடுத்திருந்தார்கள்.
பாலியல் உறவு
அதில் பாலியல் உறவு குறித்து உயர்வாகப் பேசியிருக்கும் போப் பிரான்சிஸ், "கடவுள் மனிதனுக்கு வழங்கிய அழகான விஷயங்களில் ஒன்று" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர், தன்பாலின உரிமைகள், கருக்கலைப்பு, பாலியல் தொழிலாளர்கள், பாலியல் உறவு, கத்தோலிக்க திருச்சபையில் உள்ள நம்பிக்கை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார்.
போப் பிரான்சிஸ் கூறுகையில், "செக்ஸ் என்பது மனிதனுக்குக் கடவுள் கொடுத்த அழகான விஷயங்களில் ஒன்று... பாலியல் ரீதியாக உங்களை வெளிப்படுத்துவது இதுவே மிகச் சிறந்த வழி. எனவே இந்த இயல்பான பாலியல் வெளிப்பாட்டிலிருந்து நீங்கள் விலகும் போது, அது உங்களையே குறைக்கிறது. இந்த செழுமையைக் குறைக்கிறது" என்று சுய இன்பத்தை விமர்சிக்கும் வகையிலும் பேசியுள்ளார்.
மூன்றாம் பாலினத்தவர்

மூன்றாம் பாலினத்தவர் குறித்து உங்களுக்குத் தெரியுமா என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு போப் பிரான்சிஸ், "கத்தோலிக்க சர்ச்களில் மூன்றாம் பாலினத்தவரை அனுமதிக்க வேண்டும். அவர்களை மறுக்க எந்தவொரு காரணமும் இல்லை. அவர்களை மறுக்க யாருக்கும் உரிமையும் இல்லை. நாம் அனைவருமே இறைவனின் குழந்தைகள் தான். இறைவன் யாரையுமே நிராகரிக்கவில்லை. அவர் தான் நாம் அனைவருக்கும் தந்தை. ஒருவர் சர்ச்சிற்குள் வரக் கூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
கருக்கலைப்பு குறித்த கேள்விக்கு போப் பிரான்சிஸ் கூறுகையில், "கர்ப்பத்தைக் கலைத்த பெண்களிடம் பாதிரியார்கள் கருணையுடன் இருக்க வேண்டும்.. இருப்பினும், இறைவன் கொடுப்பதைக் கலைப்பது தவறானது. இந்த நடைமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது. கருக்கலைப்பு செய்த நபரை சமூகத்தில் ஏற்பது தனி விஷயம்,. அதேநேரம் அந்த செயலை நியாயப்படுத்த முடியாது" என்றார்.
போப் பிரான்சிஸின் இந்த உரையாடல் வாடிக்கனின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான L'Osservatore Romanoஇல் வெளியாகியுள்ளது. இளைஞர்களுடன் போப் பிரான்சிஸ் நடத்திய மனம் திறந்த உரையாடலின் தொகுப்பு என்று அதில் கூறப்பட்டுள்ளது. பாலியல் உறவு குறித்து போப் கூறிய கருத்துகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications