ஏமன் சிறையில் நிமிஷா பிரியாவுக்கு கடைசி நேரத்தில் போன மெசேஜ்! அடுத்து என்ன நடக்கும்! முக்கிய தகவல்
சனா: ஏமன் நாட்டில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு தரப்பும் எடுத்த முயற்சியாலேயே இது சாத்தியமாகியுள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக இந்த விவகாரத்தில் என்ன நடந்தது.. வரும் காலங்களில் இதில் என்ன நடக்கும்.. நிமிஷா பிரியா நிரந்தரமாக விடுதலை ஆவது எப்போது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஏமன் நாட்டில் மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியா மரண தண்டனையை எதிர்கொண்டு இருக்கிறார். சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில், இன்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளால் அவரது மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நிறுத்திவைப்பு
'இந்தியாவின் கிராண்ட் முப்தி' என்று அழைக்கப்படும் சன்னி முஸ்லிம் தலைவர் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் இந்த விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அதைத் தொடர்ந்தே மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக ஏமனில் என்ன நடந்தது? மரண தண்டனை எப்படி நிறுத்தி வைக்கப்பட்டது! இதன் பின்னணி குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த விவகாரம் தொடர்பாக அல் வஸாப் பிராந்தியத்தின் ஆட்சியாளர் அப்துல் மாலிக் அல் நெஹாயா கடந்த வெள்ளிக்கிழமை ஏமன் அதிபரை நேரில் சந்தித்துள்ளார். அதன் பிறகே ஏமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி மரண தண்டனையை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டார். மேலும், இந்த நடவடிக்கையில் மத்திய அரசும் தீவிரமாக இறங்கியதாகக் கூறப்படுகிறது.
என்ன நடந்தது!
இதற்கிடையே சமூக ஆர்வலரான சாமுவேல் ஜெரோம் பாஸ்கரன் தண்டனையை நிறுத்தி வைப்பு எப்படிச் சாத்தியமானது என்பதை விளக்கியுள்ளார். பல்வேறு தரப்பில் இருந்தும் எடுக்கப்பட்ட தீவிர முயற்சியின் விளைவாகவே தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், அப்துல் மாலிக் மூலம் முயற்சிகள் நடக்கும்போது அந்த விவரங்களை வெளியிட வேண்டாம் என்று ஏமன் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தாமதமாக வந்த அறிவிப்பு
இன்று ஜூலை 16ம் தேதி நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், நேற்றைய தினம் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், உண்மையில் அதற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது ஜூலை 14ம் தேதியே மரணத் தண்டையை நிறுத்தி வைக்கும் முடிவு எடுக்கப்பட்டு விட்டதாம். அட்டர்னி ஜெனரலின் உத்தரவின் பேரில் நிமிஷா பிரியா மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக அன்றைய தினமே சிறை அதிகாரிகளுக்குக் கடிதம் போய் இருக்கிறது. ஆனால், ஒரு நாள் கழித்தே இதை அறிவித்துள்ளனர்.
என்ன காரணம்!
ஏனென்றால் இதில் பாதிக்கப்பட்ட மஹ்தி குடும்பத்தினர் இதுவரை நிமிஷா பிரியாவை மன்னிக்கவில்லை. புதன்கிழமை நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைப் பார்க்க மஹ்தி உறவினர்கள் பலரும் நேரில் வருவதாக இருந்தது. எனவே, மரணதண்டனையை ஒத்திவைக்கும் முடிவை முன்கூட்டியே வெளியிட்டால் அது சட்ட ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கும் என்பதாலேயே அது குறித்து கடைசி நிமிடத்தில் அறிவிக்கப்பட்டதாக சாமுவேல் ஜெரோம் பாஸ்கரன் குறிப்பிடுகிறார்.
அடுத்து என்ன
அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்தும் விளக்கியுள்ள அவர், "இப்போது வரை மஹ்தி குடும்பத்தினர் நிமிஷா பிரியாவை மன்னிக்கவில்லை. மரண தண்டனையை நிறுத்த மஹ்தி குடும்பத்தினரின் சம்மதம் முக்கியம். நிமிஷாவின் எதிர்காலம் மஹ்தி குடும்பத்தினரிடம் உள்ளது. நிமிஷாவை மஹ்தி குடும்பத்தினர் மன்னிக்க வேண்டும். அவர்களைக் குடும்பத்தை மன்னிக்க வைப்பது எங்கள் வேலை" என்று அவர் கூறினார்.
அதாவது இப்போது நிமிஷா பிரியா மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ள போதிலும், அது தற்காலிகமானது தான். நிரந்தரமாக அவர் சுதந்திர காற்றைச் சுவாசிப்பது மஹ்தி குடும்பத்தின் கைகளிலேயே இருக்கிறது. அடுத்தகட்டமாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரத்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு மன்னிப்பைப் பெறும் முயற்சி எடுக்கப்படும்












Click it and Unblock the Notifications