"சார்.. ஒரே பொணமா கிடக்கு சார்.. ஓடியாங்க சார்"... ஒரு குட்டி டெரர் தொடர் (1)
டிரிங்.. டிரிங்..டிரிங்.. டிரிங்..
"ஹல்லோ.."
"சார்.. சார்.."
"சொல்லுங்க சார்.. என்ன பிரச்சினை.. பதட்டப்படாம சொல்லுங்க"
"சார்.. ஒரே பொணமா கிடக்கு சார்.. ஓடியாங்க சார்"
அந்த மனிதர் சொல்லச் சொல்ல... அடுத்த சில நிமிடங்களில் கலிபோர்னியா மாகாணமே கதி கலங்கிப் போனது.
கலிபோர்னியா மாகாணத்தின் அழகிய கிராமம் சான்டிகோ. அங்குள்ள குட்டி குடியிருப்புதான் ரான்சோ சான்டா பே.. கிட்டத்தட்ட 2000 பேர் அந்த கிராமத்தில் வசித்து வந்தனர். இந்த கிராமத்திலிருந்துதான் மேலே சொன்ன போன் கால் வந்தது.
மின்னல் வேகத்தில் மீட்புப் படையினர், நிவாரணக் குழுவினர், போலீஸார், தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள், ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்தன.. இருட்டிலும் அந்த கிராமம் ஜொலிக்க ஆரம்பித்தது வாகனங்களின் வெளிச்சப் புள்ளியில் நனைந்து.
அது 1997.. மார்ச் 26 இரவு.. மொத்தமாக 39 இறந்து போன உடல்கள். அனைவருமே ஒரே டிரஸ்ஸில். நீட்டாக படுத்திருந்த நிலையில் பிணமாகியிருந்தனர். தெளிவான தற்கொலை. அனைவருமே தங்களது முகத்தை பிளாஸ்டிக் பையால் இறுக்கக் கட்டியிருந்தனர். (ஆசை படத்தில் பிரகாஷ் ராஜ் செய்வது போல)
ஹெவன்ஸ் கேட் என்ற மூட நம்பிக்கைக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் இவர்கள். இந்தக் குழு மக்களை மூளைச் சலவை செய்து மரணத்திற்குப் பிறகு சொர்க்கத்திற்குப் போவது எப்படி என்பதை அவர்களிடையே விளக்கி வந்தது. இது ஒரு ரகசிய கும்பல்.
இந்த முட்டாள்தனமான கும்பலின் தலைவன் மார்ஷல் ஆப்பிள் ஒயிட். மனித குலத்திற்கும் அப்பால் ஒரு உலகம் உள்ளது. அது மகா சாம்ராஜ்யம். அதுதான் சொர்க்கம். நாம் அங்கு செல்வதே நமது அல்ட்டிமேட் முடிவாக இருக்க வேண்டும் என்று கூறி வந்தவர் இந்த ஒயிட். இந்த பூமியை விட்டு நாம் காலி செய்து விட்டு போகக் கூடிய ஒரே இடமும் இதுவே என்பதும் இந்த ஒயிட்டின் கூற்றாகும்.
அதை விட கொடுமை வேற்று கிரக விண்கலம் ஒன்றும் தன்னிடம் இருப்பதாகவும் இந்த மரை கழன்ற ஒயிட் கூறி வந்தார். இறந்த 39 பேரில் இந்த முட்டாள் ஒயிட்டும் ஒருவர்.
இருளைக் கிழித்த மரணத்தின் மறக்க முடியாத அந்த கருப்பு நினைவுகளை இன்னும் ரேன்சோ சான்டா பே கிராமம் மறக்கவில்லை...