மீண்டும் 'ஷட்டவுனு'க்கு தயாராகிறது அமெரிக்கா... மூடப்படுகிறது அரசு அலுவலகங்கள்!!
வாஷிங்டன்: அமெரிக்கா நாடாளுமன்றத்தில் செலவின மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காவிட்டால் அக்டோபர் 1-ந் தேதி முதல் 'ஷட்டவுனை' நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நிதி நெருக்கடி போன்ற அசாதாரண சூழல்களில் அரசாங்கமே ஷட்டவுனை நடைமுறைப்படுத்துவது வழக்கம். இந்த கால கட்டத்தில் மத்திய அரசு அலுவலகங்கள், பூங்காக்கள், சுற்றுலா இடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட்டிருக்கும். அரசாங்கத்தில் உள்ள தற்காலிக ஊழியர்கள் லே ஆப் நோட்டீஸுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
கடந்த 2013ஆம் ஆண்டு ஒபாமா அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்க.. பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் தராமல் விட்டது. இதனால் அப்போது மொத்தம் 16 நாட்கள் அமெரிக்கா அரசு ஷட்டவுனை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தற்போதும் 2016ஆம் ஆண்டுக்கான செலவின மசோதாவுக்கு நாடாளுமன்றமானது செப்டம்பர் 30-ந் தேதிக்கு முன்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி செய்யாமல் போனால் அக்டோபர் 1-ந் தேதியன்று ஷட்டவுனை நடைமுறைப்படுத்த ஒபாமா அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ஒபாமா அரசு மேற்கொள்ளத் தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.