ஒபாமா - மோடிக்கு சந்திப்புக்கு எதிரான மனுவில் 85,000 போலி கையெழுத்துக்கள்... நீக்கியது அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்க பயணத்தின் போது ஒபாமா மோடியைச் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை மாளிகைக்கு அனுப்பப் பட்ட மனுவில் சுமார் 85 ஆயிரம் போலிக் கையெழுத்துக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலிக் கையெழுத்துக்களை நீக்கி அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரதமர் பதவியேற்றதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக நீடித்த விசாப் பிரச்சினை முடிவு பெற்று அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார் மோடி. அப்போது அந்நாட்டின் அதிபர் ஒபாமாவை சந்தித்து இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் விதத்தில் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மோடியை ஒபாமா சந்திக்கக்கூடாது என முறையிட்டு, சீக்கியர்களுக்கான நீதி தேடும் அமைப்பின் சார்பில் வெள்ளை மாளிகை இணையதளத்திற்கு கடந்த மாதம் ஒரு மனு அனுப்பப்பட்டது.
வழக்கமான பாதுகாப்பு சோதனைக்காக அந்த மனுவை சோதனை செய்த போது, அதில் 85 ஆயிரம் போலி கையெழுத்துக்கள் இடம் பெற்றுள்ளதை அமெரிக்க நிர்வாகம் கண்டுபிடித்து நீக்கியுள்ளது.
இத்தகவலை அமெரிக்க அதிபர் மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் கேத்லின் ஹெய்டன் தெரிவித்துள்ளார்.