அடுத்தடுத்து வீழும் ஈராக் நகரங்கள்... உலகை திரும்பிப் பார்க்க வைத்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்!!
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் கூட அல்கொய்தாவுடன் தொடர்புடைய ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பிடம் வீழ்ந்துவிடக் கூடும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. உலக நாடுகள் அனைத்தும் இப்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் விஸ்வரூபம் பற்றி விவாதித்து வருகின்றன.
"The Islamic State of Iraq in Syria " அதாவது சிரியாவில் ஈராக்கிய இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பின் சுருக்கம்தான் ஐ. எஸ்.ஐ.எஸ். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து ஒரு இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவதுதான் இந்த அமைப்பின் நோக்கம்.
Islamic State of Iraq and the Levant என்றும் இந்த அமைப்பு அழைக்கப்படுகிறது. இந்த அமைப்புக்கு தலைமையேற்று நடத்துபவர் அபு பக்கர் அல் பகதாதி. அவருடன் அல் பக்தாதியால், அய்மான் அல் ஸவாகிரி ஆகியோரும் இந்த அமைப்பின் தளபதிகளாக இருக்கின்றனர்.

2003ல் அல்கொய்தா
2003 ஆண்டில் ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய போது அல்கொய்தாவில் இந்த கிளர்ச்சியாளர்கள் இணைந்தனர். 2010 ஆம் ஆண்டு அல்கொய்தாவின் ஈராக் அமைப்புக்கு அபு பக்கர் அல் பகதாதி தலைவரானார். பின்னர் அந்தக் குழுவே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பாக மாறியது.

2011-ல் தாக்குதல் தொடக்கம்
2011,2012ஆம் ஆண்டுகளில் ஈராக் நகரங்களில் வன்முறைகளை அரங்கேற்றி தாக்குதலைத் தொடங்கியது இந்த அமைப்பு.

2013-ல் போர்
பின்னர் 2013ஆம் ஆண்டு பலூஜா மற்றும் ரமாடி நகரங்களைக் கைப்பற்றி உள்நாட்டுப் போரில் குதித்தது ஐ.எஸ்.ஐ.எஸ்.

ஈராக்- சிரியாவில் இஸ்லாமிய தேசம்
தற்போது ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் நகரங்களை தங்கள் வசமாக்கிக் கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் சிரியாவில் தங்களது வசம் இருக்கும் பகுதிகளின் மீதான ஆதிக்கத்தையும் வலுப்படுத்தி வருகின்றனர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர்..

பாக்தாத் வீழும்?
தலைநகர் பாக்தாத்தை குறி வைத்து முன்னேறி வருகிறது ஐ.எஸ்.ஐ.எஸ். இந்த அமைப்பின் திடீர் விஸ்வரூபம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை மட்டுமின்றி அண்டை இஸ்லாமிய நாடுகளையும் அதிர வைத்திருக்கிறது.

தாக்கு பிடிக்குமா?
அதே நேரத்தில் சர்வதேச படைகளின் முன்பாக ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்கு பிடிக்க முடியுமா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர் அரசியல் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications