டிரம்ப் நண்பர் சார்லி கிர்க் கொலையாளி கைது.. யார் இந்த டைலர் ராபின்சன்? துப்பாக்கியுடன் பாடல் வரி!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நண்பரான சார்லி கிர்க், சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், அவரை சுட்ட 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த டைலர் ராபின்சன் என்ற இளைஞர் சிக்கியது எப்படி என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நண்பரும், வலதுசாரி ஆர்வலருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 10 ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். சார்லி கிர்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளர். நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியினருக்கும், டொனால்ட் டிரம்புக்கும் ஆதரவாக தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

டைலர் ராபின்சன் கைது
இந்நிலையில், சார்லி கிர்க் அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் சார்லி கிர்க் பேசிக்கொண்டிருந்தபோது அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சார்லி கிர்க் கழுத்தில் குண்டு பாய்ந்து அவர் பரிதாபமாக பலியானார். இந்தச் சம்பவத்தில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து கொலைக் குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், டைலர் ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சார்லி கிர்க் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான காட்சிகளின் பதிவுகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அந்தப் புகைப்படத்தில் டைலர் ராபின்சன் இருந்ததை அடையாளம் கண்ட அவரது தந்தை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, டைலர் ராபின்சனை போலீசார் கைது செய்துள்ளனர்.
FBI விசாரணை
"எங்களிடம் சரியான நபர் காவலில் இருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆனால் அவர் யார், ஏன் அவர் சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்றார் என்பதற்கான முழு தகவல்களையும் பெறுவதற்கு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளோம்" என FBI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் சொன்ன தகவல்
இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில் டைலர் ராபின்சன் குடும்பத்தினர் போலீசாரிடம் கூறுகையில், டைலர் ராபின்சன் சமீப காலமாகவே அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்ததாகவும், சார்லி கிர்க் வெறுப்பை மட்டுமே பரப்புவதாக அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு முன்பு இரவு உணவு உரையாடலின் போது, டைலர் ராபின்சன், கிர்க் வெறுப்பைப் பரப்புபவர் என்று கூறியதாகவும், உட்டா பல்கலைக்கழகத்தில் கிர்க் பங்கேற்கும் நிகழ்வைப் பற்றியும் அவர் குறிப்பிட்டதாக அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.
சார்லி கிர்க்கை கொல்வதற்காக நீண்டகாலமாக ராபின்சன் திட்டமிட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக உட்டா மாகாண ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ் கூறுகையில், "அவர் டிஸ்கார்ட் என்னும் குறுஞ்செய்தி செயலியில், அவர் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியைப் புதரில் மறைத்து வைத்துவிட்டு ஆடையையும் மாற்றியுள்ளதாக அவரின் அறை நண்பரிடம் பகிர்ந்துள்ளார். ஒரு துண்டில் சுற்றி தன்னுடைய துப்பாக்கியை மறைத்து வைத்ததாகவும், ஸ்கோப் பயன்படுத்தி சுட்டதாகவும், தன்னுடைய துப்பாக்கி 'தனித்துவமானது என்றும் குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
அதே உடையில்
ஆனால், துப்பாக்கிச் சூடு நடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி காலை 8.29 மணியளவில் டாட்ஜ் சேலஞ்சர் காரில் ராபின்சன் யூட்டா பல்கலைக்கழகத்திற்கு வந்தது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. அவர் மெரூன் நிற டி-சர்ட், சாம்பல் நிற பேண்ட், வெள்ளை லோகோவுடன் கூடிய கருப்பு தொப்பி மற்றும் சாம்பல் நிற ஷூக்களையும் அணிந்திருந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு போலீசார் அவரை கைது செய்தபோதும் அவர் அதே உடையில் இருந்துள்ளார்.
செப்டம்பர் 11 ஆம் தேதி குடும்பத்தினரை தொடர்பு கொண்ட ராபின்சன், கொலை தொடர்பானவற்றை வீட்டில் ஒப்புக்கொண்டுள்ளார். அதன் அடிப்படையிலேயே புலன் விசாரணை அதிகாரிகள் ராபின்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சார்லி கிர்க் கொலை தொடர்பாக 7,000 க்கும் மேற்பட்ட தடயங்களும் குறிப்புகளும் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெல்லா சியோ பாடல்
டைலர் ராபின்சன் சுட பயன்படுத்திய துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது. துப்பாக்கியுடன் மீட்கப்பட்ட ஷெல் உறைகளில் ரகசிய செய்திகள் பொறிக்கப்பட்டிருந்துள்ளன. அதில், பாசிசத்துக்கு எதிரான சின்னங்கள் பொறிக்கப்பட்டு இருந்ததாகவும், "ஓ பெல்லா சியாவோ, பெல்லா சியாவோ, சியாவோ, சியாவோ" பாடல் வரி பொறிக்கப்பட்டு இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications