'ஆபத்தான கலவை..' புது புது உருமாறிய கொரோனா வகைகள் உண்டாக என்ன காரணம்? உலக சுகாதார அமைப்பு விளக்கம்
ஜெனீவா: ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புது புது உருமாறிய கொரோனா எதனால் தோன்ற வாய்ப்புள்ளது என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு சில தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே உலகெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டிருந்தது. தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட வேக்சின் பணிகளால் தீவிர வைரஸ் பாதிப்பும், உயிரிழப்புகளும் கூட குறைந்தது.
இதனால் கொரோனாவின் மோசமான நிலை முடிந்துவிட்டதாகவே பல ஆய்வாளர்களும் கருதினர். இந்தச் சூழலில் தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டது.
ஓமிக்ரான் கொரோனா
இந்த புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட சில நாட்கள் மட்டுமே ஆகிறது. ஓமிக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா, இதுவரை 10க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டு சில நாட்கள் மட்டுமே ஆவதால், இது எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும், எப்படிப் பரவும் என்பது தரவுகள் இல்லை. அதேநேரம் உலக சுகாதார அமைப்பு இதனைக் கவலைக்குரிய கொரோனா வகையாக பட்டியலிட்டுள்ளது.
உலக சுகாராத அமைப்பு
இந்தச் சூழலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் டெட்ரோஸ் அதானோம், "தற்போது வரை டெல்டா பாதிப்பு தான் உலகெங்கும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இப்போது புதிதாக ஓமிக்ரான் என்ற உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்தும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கே ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பையும் கட்டுப்படுத்தும்.
என்ன நடவடிக்கை தேவை
ஓமிக்ரான் மற்ற நாடுகளுக்கும் பரவும் வாய்ப்புள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் தங்கள் பொதுச் சுகாதார கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், பொதுமக்களிடையே கொரோனா வழிகாட்டுதல்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். மேலும். கொரோனாவால் மோசமாகவும் எளிதாகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு உடனடியாக 2 டோஸ் வேக்சின் போடப்படுவதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.
டெல்டா கொரோனா
சர்வதேச நாடுகளின் கவனம் தற்போது 'ஓமிக்ரான்' உருமாறிய கொரோனா பக்கம் திரும்பியுள்ளது. அதேநேரம் அதிவேகமாகப் பரவும் ஆற்றல் கொண்ட டெல்டா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தவே பல நாடுகள் போராடிக் கொண்டிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தற்போது உலகில் கண்டறியப்படும் அனைத்து கொரோனா கேஸ்களும் டெல்டா பாதிப்பாகவே உள்ளது. டெல்டா கொரோனா பரவுவதைத் தடுக்கவும், பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றவும் நம்மால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும்.
தடுக்க முடியாது
இதை நாம் சிறப்பாகச் செய்தால், டெல்டா பரவலைத் தடுத்தாலேயே ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவையும் நாம் கட்டுப்படுத்தலாம். ஆனால் டெல்டா கொரோனா பாதிப்பைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருந்தால், ஓமிக்ரான் கொரோனா உலகெங்கும் பரவுவதை யாராலும் தடுக்க முடியாது,.
என்ன காரணம்
உலகில் சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே 2 டோஸ் வேக்சின் பணிகள் முடிந்து பூஸ்டர் டோஸ் பணிகளும் கூட தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், சில நாடுகளில் வேக்சின் பணிகள் மெதுவாகவே நடைபெறுகின்றன. இப்படிக் குறைந்த வேகத்தில் நடைபெறும் வேக்சின் பணிகள் மற்றும் குறைவான கொரோனா பரிசோதனைகள் காரணமாக புது புது உருமாறிய கொரோனா வைரஸ்கள் தோன்றும் அபாயம் உள்ளது. இதனால் தான் வேக்சின் சமர்த்தும் வேண்டும் என்றும் அனைத்து நாடுகளிலும் வேக்சின் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என்றார்
Recommended Video
ஓமிக்ரான் அச்சம்
இதற்கு முந்தைய உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் ஓமிக்ரான் கொரோனா வித்தியாசமானது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓமிக்ரான் கொரோனாவில் 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளதாகவும் இதுவரை எந்த உருமாறிய கொரோனா வைரசிலும் இந்தளவுக்கு மாற்றங்களைக் கண்டறியவில்லை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.