குவைத் புதிய மன்னர் யார்? பொருளாதார சீர்திருத்தங்கள் நடக்க யார் ஆட்சிக்கு வர வேண்டும்?
பக்ரைன்: குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 91. அமைதியையும், சமாதானத்தையும் தனது கொள்கையாக கொண்டு ஆட்சி நடத்தியவர் ஷேக் சபா அல் அஹ்மத்.
இவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழர்கள் மற்றும் மலையாளிகள் குவைத்தில் அதிக வேலைவாய்ப்புகளை பெற்றனர்.
எனவே, ஷேக் சபா அல் அஹ்மத் மறைவுக்கு பிறகு யார் குவைத் மன்னராக பதவிக்கு வர உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு உலகின் பிற நாடுகளுக்கு ஈடாக, தமிழகம் மற்றும் கேரள மாநில மக்களுக்கும் உள்ளது. ஆனால், யார் மன்னராக பொறுப்புக்கு வர உள்ளார்கள் என்று கணிப்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை என்கிறார்கள்.

யார் அடுத்த மன்னர்?
செப்டம்பர் 14 ஆம் தேதி, குவைத் துணை மன்னரின் மகனும், மகுட இளவரசருமான ஷேக் நவாஃப் அல்-அஹ்மது (83) குவைத் தேசிய பாதுகாப்பு அமைப்பு தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் வேறு யாருமில்லை. மறைந்த மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத்தின், ஒன்று விட்ட சகோதரர்தான்.

அதிகாரங்கள்
கடந்த ஜூலை 23ம் தேதி முதல் மன்னர், எமிர் ஷேக் சபா அல்-அஹ்மத் தனது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தார். எனவே முடி இளவரசர் ஷேக் நவாஃப் அல் அஹ்மது தற்காலிகமாக சில அதிகாரங்களை கையில் வைத்திருந்தார். அவர்தான் தற்போது குவைத்தின் உண்மையான ஆட்சியாளராக உள்ளார் என்றும் பல அரசியல் பார்வையாளர்கள் கணிக்கிறார்கள். இடைக்கால மன்னராக அவருக்குத்தான் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிகார போட்டி
இருப்பினும், ஷேக் நவாஃப் அடுத்த மன்னராக பதவியேற்பது எளிதான விஷயமில்லை. அவரது குடும்பத்துக்குள்ளேயே, இந்த பதவிக்கு போட்டிகள் வரும் வாய்ப்பு உள்ளது. இதையெல்லாம் தெரிந்துதான், தனது மகன்களில் ஒருவரை குவைத் பாதுகாப்பு அமைப்பு தலைவராக நியமித்துள்ளார் ஷேக் நவாஃப். நவாஃப் அல்-சபா ராணுவ துணைத் தளபதியாகவும் உள்ளார், மேலும் அவரது மற்ற மூன்று மகன்களும் ராணுவம் அல்லது பாதுகாப்பு சேவைகளில் மூத்த பதவிகளை வகிக்கின்றனர். பிரச்சினை என்று வந்தால் அதிகாரத்தை தனது வசத்தில் வைத்துக்கொள்ள இந்த பதவிகள் உதவும்.

மன்னர் மகன்
மறைந்த மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத்தின் மூத்த மகன், நாசர் சபா அல்-அஹ்மத்தான், ஷேக் நவாஃப்புக்கு போட்டியாளராக அறியப்படுகிறார். இவர் தனது தந்தை மன்னராக இருந்தபோது, துணை பிரதமராக பதவி வகித்தவர். பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தார். ஆனால், 2019 நவம்பரில் இவரை பதவியிலிருந்து நீக்கினார் மன்னர். குவைத்தின் மெகா திட்டங்களில் ஒன்றான "சில்க் சிட்டி" நாசரின் மூளையில் உதித்த திட்டம்தான். ஆனால் ஊழல் குற்றச்சாட்டால், தனது மகன் என்றும் பாராமல் நாசரை பதவியிலிருந்து நீக்கியிருந்தார், மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத்.

குவைத் பொருளாதாரம்
நாசர் சபா தற்போது திட்டமிடல் கவுன்சிலின் தலைவராக உள்ளார். அவரது பொருளாதார கருத்துக்கள் முற்போக்கானவை. ஆனால், தற்போது இடைக்கால மன்னராக பதவியேற்றுள்ள ஷேக் நவாஃப் அல்-அஹ்மது பழமைவாதி. எனவே சீர் திருத்தங்கள் நடைபெற வாய்ப்பு இல்லை. ஒருவேளை நாசர் சபா அல்-அஹ்மத் அடுத்த மகுட இளவரசராக நியமிக்கப்பட்டால், கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குவைத் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முக்கியத்துவம் தருவார்.












Click it and Unblock the Notifications