திடீரென நீல நிறத்தில் மாறும் நாய்கள்.. அணுகசிவு ஆபத்தும் இருக்கே.. அச்சத்தில் மக்கள்.. என்ன காரணம்!
செர்னோபில்: செர்னோபில் அணுக்கசிவை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. உலகில் ஏற்பட்ட மிக மோசமான அணு விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதற்கிடையே அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் நாய்கள் திடீரென நீல கலரில் மாறியுள்ளது. இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அணுகசிவு எந்தளவுக்கு ஆபத்தானது என்பதைக் காட்டும் வகையிலான போட்டோ இப்போது வெளியாகியுள்ளது. அதாவது செர்னோபில் அணுமின் நிலையப் பகுதியில் உள்ள சில நாய்கள் பிரகாசமான நீல நிறத்தில் காணப்படுகிறது. இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அப்பகுதியில் வாழும் நாய்களைப் பராமரிக்கும் 'Dogs of Chernobyl' என்ற அமைப்பு இந்த போட்டோக்களை பகிர்ந்துள்ளது.

செர்னோபில்
உக்ரைனின் செர்னோபில் என்ற பகுதியில் அணு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. அப்போது அது சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. 1986ம் ஆண்டு அங்கு மிக மோசமான ஒரு அணு கசிவு விபத்து ஏற்பட்டது. இது ஒரு பேரழிவாகவே கருதப்படுகிறது. இந்த சம்பவத்தால் அங்கு மிகப் பெரிய தீ விபத்தும், அதைத் தொடர்ந்து அணு கசிவும் ஏற்பட்டது. இதனால் பலர் உயிரிழந்தனர். மேலும், அருகே உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் அதிகளவில் வெளியேற்றப்பட்டனர்.
தங்கள் உடமைகள் அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு வெளியேறினர். முதலில் அங்கு மனிதர்கள் இல்லாததால் வேறு எந்தவொரு விலங்குகளும் இருக்காது என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அப்படி இல்லை.. மனிதர்கள் இல்லாததால் பல விலங்குகள் அங்குச் சுதந்திரமாக நடமாட ஆரம்பித்தது. காடு போன்ற சூழலை உருவாக்கிவிட்டது.
நாய்கள்
அணு விபத்து ஏற்பட்டபோது, அங்கு வசித்த மக்கள் செல்லப் பிராணிகளாக வளர்த்த நாய்களை அப்பகுதி மக்கள் அப்படியே விட்டுச் சென்றனர்.. அந்த நாய்களும் அழியவில்லையாம்.. அவையும் அங்கிருந்த காடு போன்ற சூழலுக்குத் தங்களைத் தகவமைத்து வளர ஆரம்பித்துள்ளன. அந்த நாய்களின் அடுத்தடுத்த தலைமுறைகள் தான் இப்போது நீல நிறத்தில் மாறியுள்ளன.
அது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த நாய்கள் செர்னோபில் மண்டலத்தில் உயிர் பிழைப்பது சாத்தியம் என்பதற்கான அடையாளமாக மாறியுள்ளன. இப்படி இங்குச் சுற்றித் திரியும் நாய்களைத் தான் டாக்ஸ் ஆஃப் செர்னோபில் அமைப்பு கவனித்து வருகிறது.
நீல நிறம்
தடைசெய்யப்பட்ட இந்த 18 சதுர மைல் பகுதிக்குள் சுமார் 700 நாய்கள் வசிப்பதாகத் தெரிகிறது. இந்த அமைப்பு தான் அந்த நாய்களுக்கு உணவு, மருத்துவச் சிகிச்சை போன்ற அத்தியாவசியத் தேவைகளை வழங்குகிறது. அவர்கள் சமீபத்தில் நாய்களுக்கு வழக்கமான கருத்தடை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்த போதுதான், மூன்று நாய்களுக்கு நீல நிற முடி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
என்ன காரணம்
நாய்கள் இப்படித் திடீரென கலர் மாறியதற்கு என்ன காரணம் எனத் தெரியாமல் மருத்துவக் குழுவினர் குழப்பத்தில் இருக்கிறார்கள்.. நாய்கள் எதாவது புதிய கெமிக்கல்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்றும் அதுவே நீல நிறத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். ஆய்வுக்காக நாய்களின் ரோமம், தோல் மற்றும் ரத்த மாதிரிகளைச் சேகரித்து வருகின்றனர்.
இது குறித்து டாக்ஸ் ஆஃப் செர்னோபில் தங்கள் ட்விட்டரில், "இதற்கான காரணம் எங்களுக்குத் தெரியவில்லை, என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய நாங்கள் அவற்றைப் பிடிக்க முயல்கிறோம். அங்குள்ள கெமிக்கல்களை தொடர்பு கொண்டிருக்கலாம். அவற்றின் செயல்பாடுகளில் மாற்றம் எதுவும் தென்படவில்லை. மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் தெரிகின்றன" என்றார்.












Click it and Unblock the Notifications