"அமைதியா இருங்க.. இல்லைனா போர் விரிவடையும்.." அமெரிக்காவை வெளிப்படையாக எச்சரித்த ஈரான்.. பதற்றம்
தெஹ்ரான்: இஸ்ரேல் போர் மூன்றாவது வாரமாகத் தொடரும் நிலையில், இது தொடர்பாக ஈரான் அரசு அமெரிக்காவுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் படை இம்மாத தொடக்கத்தில் தீவிரமான தாக்குதலை நடத்தியது. சமீப காலத்தில் அங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களில் இது மிக மோசமான தாக்குதலாக இருந்தது.

இதையடுத்து இஸ்ரேலும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்துவதால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரான்: இதற்கிடையே இந்த விவகாரத்தில் அமெரிக்காவை எச்சரிக்கும் வகையிலான கருத்துகளை ஈரான் தெரிவித்துள்ளது. அதாவது இஸ்ரேல் செய்யும் அனைத்து விஷயங்களுக்கும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு கொடுத்தால் அமெரிக்காவிற்கு எதிராக புதிய போர்முனைகள் ஆரம்பிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். இது இஸ்ரேல் ஹமாஸ் போர் பிராந்திய போராக மாறும் அச்சத்தை அதிகப்படுத்துவதாகவே உள்ளது.
அமெரிக்கா மீது என்ன மாதிரியான தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்பது குறித்த ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்டொல்லாஹியன் விரிவாக விளக்கமளிக்க மறுத்துவிட்டார். மேலும், சமீப காலமாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது நடக்கும் தாக்குதலுக்கு ஈரான் காரணமில்லை என்றும் அவர் மறுத்துள்ளார்.
எச்சரிக்கை: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்கா மற்ற நாடுகளை அமைதியாக இருக்க வேண்டும் எனச் சொல்கிறது. ஆனால், அமெரிக்கா மட்டும் முழுக்க முழுக்க இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அமெரிக்கா இதை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வந்தால் அமெரிக்காவிற்கு எதிராகவும் புதிய முனைகள் ஆரம்பிக்கும் என நான் எச்சரிக்க விரும்புகிறேன்.
காசா பகுதியில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் கொல்லப்படுவது தொடர்ந்தால் நிலைமை கையை விட்டுச் செல்லும் அபாயம் இருக்கிறது. இந்தப் போர் இத்துடன் முடிவடைய வேண்டுமா அல்லது போர் தீவிரம் அதிகரித்து அது மற்ற இடங்களுக்குப் பரவ வேண்டுமா என்பதை அமெரிக்கா தான் முடிவு செய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
தொடர்பு இல்லை: சிரியாவில் உள்ள ஈரான் படைகள் மீது அமெரிக்கா நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியிருந்தது. இது குறித்துப் பேசிய அவர், "சிரியாவில் இருக்கும் குழுக்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. அமெரிக்கப் படைகளைத் தாக்கும் அந்தக் குழுக்கள் சுதந்திரமாகச் செயல்படுகின்றன.
எங்களிடம் இருந்து அந்தக் குழுக்களுக்கு எந்தவொரு உத்தரவுகளும் செல்வதில்லை. இவை ஈரான் ஆதரவு குழுக்கள் என அமெரிக்கா சொல்கிறது. ஆனால், உண்மையில் அவை சுதந்திரமாக இயங்கும் குழுக்கள்... அதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை.
மோசமான விளைவுகள்: இஸ்ரேல் சமீப காலமாகக் காசா மீது தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. காசா மீது படையெடுப்பை ஆரம்பித்தால் இஸ்ரேல் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இஸ்ரேல் அதன் தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால் இந்த மோதல் பிராந்தியம் முழுக்க பரவும் ஆபத்துகள் இருக்கிறது. அது பிரச்சினையை அதிகரிக்கவே செய்யும்.
அதேநேரம் அப்பாவி மக்கள் ஹமாஸ் வசம் பிணையக் கைதிகளாக இருந்தால்.. அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். தற்போது வரை சிரியா உட்பட உலகின் எந்தவொரு பகுதிக்கும் நாங்கள் புதிதாகப் படைகளை அனுப்பவில்லை. ஆனால், இந்தப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து வருகிறோம். ஈரான் நலனைக் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications