போரில் தோற்றதுக்கு புரமோஷன்.. ஃபீல்டு மார்ஷலாக முனீர்.. இதெல்லாம் பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும்! பின்னணி
இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூருக்கு இந்தியா உடனான மோதலில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வரக் கோரிக்கை விடுத்தது. இந்தளவுக்கு ஒரு படுதோல்வி அடைந்த பிறகும் முனீருக்கு ஃபீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவாக ராணுவம் எதாவது ஒரு மிகப் பெரிய வெற்றியை அடைந்தால் தான் இந்த ஃபீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்படும். ஆனால், ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது.. இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத பாகிஸ்தான், போர் நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்திருந்தது.

தோற்றதற்குப் பதவி உயர்வு
இந்தியாவும் பொதுமக்கள் நலன் கருதியே தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்டது. அப்படியிருக்கும் போது முனீருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் கூட இது தொடர்பாக விமர்சித்து வருகிறார்கள். உலகிலேயே தோற்றதற்கு பதவி உயர்வைக் கொடுக்கும் ஒரே நாடு பாகிஸ்தான் என்றும் சாடி வருகிறார்கள்.
அதேநேரம் இந்த பதவி உயர்வுக்கு வேறு காரணங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் இந்தியா மீது தாக்குதலை ஆரம்பித்த முனீருக்கு பாக். ராணுவத்திற்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் இருந்து முனீரை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இந்த பதவி உயர்வு பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே தோல்விக்கு பிறகும் முனீருக்கு பதவி உயர்வு தரப்பட்டுள்ளது. அதாவது ராணுவ செயல்பாட்டைத் தாண்டியும் அரசியல் காரணமாகவே பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.
வல்லுநர்கள் சொல்வது என்ன
இது தொடர்பாகப் பாகிஸ்தான் விவகாரங்களை நீண்ட காலம் கவனித்து வரும் வல்லுநர்கள், "பொதுவாக ஒரு ராணுவ வெற்றிக்குப் பிறகு தான் ஃபீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்படும். ஒரு தோல்விக்குப் பிறகு இதுபோன்ற பதவி உயர்வு வழங்கப்படுவது இதுவே முதல் முறை.. இந்தியாவிடம் பெற்ற படுதோல்வியை மறைக்கவே அவர்கள் இதுபோல செய்கிறார்கள்" என்றார்.
முனீரின் அதிகாரத்தை வலுப்படுத்தவே இந்த பதவி உயர்வை வழங்கியுள்ளனர். இருப்பினும், அது பாகிஸ்தானில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
கூடுதல் அதிகாரம் எதாவது இருக்கா?
மேலும், ஃபீல்ட் மார்ஷல் பதவி பெரும்பாலும் வெறும் அடையாளப்பூர்வமானது மட்டுமே. இதற்குத் தனியாகக் கூடுதல் அதிகாரிகள் எதுவும் இல்லை. ராணுவ தளபதியாக இருந்தபோது இருந்த அதிகாரங்களே தொடரும். ஃபீல்ட் மார்ஷல் என்பது பிரிட்டன் ராணுவத்தில் தான் வழங்கப்படும். சுதந்திரத்திற்குப் பிறகு அந்த மரபைப் பாகிஸ்தானும் பின்பற்றுகிறது. ஃபீல்ட் மார்ஷல் என்ற பதவியை ஒருவர் மரணிக்கும் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், அவருக்கான அதிகாரம் என்பது மற்ற உயர் அதிகாரிகளே போலவே ஓய்வு பெறும் வரை மட்டுமே இருக்கும்.
ஃபீல்ட் மார்ஷலாக இருப்பதால் தனித்துவமான சீருடை அணிவது, அதிகாரப்பூர்வ வாகனங்களில் ஐந்து நட்சத்திரங்களைப் பொருத்திக் கொள்வது உள்ளிட்ட சில சலுகைகள் மட்டும் கிடைக்கும்.
ஜெனரல் அயூப் கான்
ஏனென்றால் இதற்கு முன்பு பாகிஸ்தானில் ஒரே ஒரு முறை மட்டுமே இந்த உயரிய ஃபீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜெனரல் அயூப் கான் என்பவர் மட்டுமே இதற்கு முன்பு ஃபீல்ட் மார்ஷலாக இருந்துள்ளார். அதுவும் ஒரு வினோதமான சூழலில் தான் ஜெனரல் அயூப் கானும் ஃபீல்ட் மார்ஷல் ஆனார். அதாவது 1958ம் ஆண்டு பாகிஸ்தானில் அப்போதிருந்த அரசுக்கு எதிராக ராணுவ புரட்சியை அயூப் கான் செய்தார்.
அப்போது என்ன நடந்தது?
1958 அக்டோபர் மாதம் பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடித்த அயூப் கான், ஓராண்டு கழித்து தனக்கு தானே ஃபீல்ட் மார்ஷல் பதவி வழங்கிக் கொண்டார். அயூப் கான் பதவி உயர்வுக்குப் பிறகு ராணுவத்தைத் தொடர்ந்து வழிநடத்தவில்லை. அவர் நாட்டை ஆழ்வதில் கவனம் செலுத்தினார். 2027 வரை முனீர் பதவியில் இருக்கும் சூழலில், அதுவரை அவர் ராணுவத்தை மட்டும் வழிநடத்துவாரா இல்லை நாட்டையே வழிநடத்தும் திட்டம் எதாவது இருக்கிறதா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications