உலகின் பணக்கார நாடு.. இங்கே எல்லாமே இலவசம் தான்! ஆனாலும் நாட்டை விட்டு ஓடும் மக்கள்! என்ன காரணம்
லக்சம்பர்க்: ஐரோப்பாவின் மிகவும் பணக்கார நாடான லக்சம்பர்க்கில் இருக்கும் மக்கள் திடீரென அந்நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
ஐரோப்பாவில் உள்ள முக்கிய நாடுகளில் ஒன்று லக்சம்பர்க். இது ஐரோப்பாவில் உள்ள பணக்கார நாடுகளில் ஒன்றாகும். ஆனால், இந்த நாட்டில் இருந்து தான் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்களாம். இதற்கான காரணம் என்ன.. ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்பது குறித்துப் பார்க்கலாம்.

வடக்கு ஐரோப்பாவில் இருக்கும் குட்டி நாடு லக்சம்பர்க். இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையே வெறும் 6.6 லட்சம் தான். இந்த நாட்டின் ஒட்டுமொத்த பரப்பளவே சென்னையை விட சற்று பெரியது.. அவ்வளவு தான்.
பணக்கார நாடு: இந்த நாட்டில் உள்ள மக்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் பணக்காரர்கள் என்று சொல்லலாம். ஐரோப்பாவில் தனிநபர் ஜிடிபி அடிப்படையில் பார்த்தால் இது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மேலும், உலகின் பல டாப் நிறுவனங்களும் கூட இங்கே தங்கள் அலுவலங்களை அமைத்துள்ளது. அந்தளவுக்கு மிகவும் வலுவான மற்றும் பணக்கார நாடாக லக்சம்பெர்க் இருக்கிறது.
இங்கே மற்றொரு சிறப்பு என்னவென்றால் இங்கே பொது போக்குவரத்து முற்றிலும் இலவசம். ஆண்கள், பெண்கள் என்று இல்லாமல் அனைத்து தரப்பினருக்குமே இங்கு பொது போக்குவரத்து முற்றிலுமாக இலவசம். அதுவும் வெறும் பேருந்துகள் மட்டுமில்லை. ரயில்களிலும் செல்ல கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இலவசம் என்றால் ஏதோ சேவை மோசமாக இருக்கும் என நினைக்காதீர்கள். இங்கே உள்ள பொது போக்குவரத்து வசதிகளைப் பார்த்தாலே நம்மை வியக்க வைக்கும். அந்தளவுக்கு பொது போக்குவரத்தைச் சிறப்பாக வைத்துள்ளனர்.
எல்லாமே இலவசம்: பொது போக்குவரத்து முற்றிலும் இலவசம் என்று லக்சம்பர்க் அறிவிக்க முக்கிய காரணம் இருக்கவே செய்கிறது. ஏனென்றால் முன்பு லக்சம்பர்க்கில் கார்கள் பயன்பாடு உச்சத்தில் இருந்தது. இதனால் டிராபிக், க்ரீன் ஹவுஸ் வாயு வெளியேற்றம் எனப் பல பிரச்சினைகளை எதிர்கொண்டது. குட்டி நாடாக இருந்தாலும் வெளியே சென்று வீடு திரும்பவே தாமதம் ஆகியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டே பொது போக்குவரத்து அனைவருக்கும் முற்றிலுமாக இலவசம் என்று அறிவித்துள்ளது லக்சம்பர்க்.
பேருந்து, ரயில், டிராம் என்று மூன்று வகையான பொது போக்குவரத்தும் உள்ள நிலையில், அங்கே இலவசம் தான். இந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளுக்கும் கூட இங்கே இலவசம்தான். அதேபோல அங்கே மருத்துவமும் முற்றிலும் இலவசம். லகசம்ப்ர்க் மக்களுக்கு அனைத்து மருத்துவச் சிகிச்சையும் இலவசம்தான். இப்படி இருந்தும் ஏன் அவர்கள் லக்சம்பர்க்கை விட்டு வெளியேறுகிறார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இங்கே வீடு வாடகை மற்றும் வீட்டை வாங்க ஆகும் செலவு விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது.
வெளியேறும் மக்கள்: கடந்த சில ஆண்டுகளில் மட்டும் வீடுகளின் விலை உச்சத்திற்குச் சென்றுவிட்டதாம். இதனால் இங்குள்ள பெரும்பாலான மக்களால் வீடுகளை வாங்கவே முடியவில்லை. அரசு மானிய விலையில் வீடுகளைக் கொடுத்தாலும் அந்தத் திட்டத்தின் கீழ் காத்திருப்பு காலம் ஆண்டுக் கணக்கில் இருக்கிறது.
அங்கு வசிக்கும் மக்களின் சராசரி ஆண்டு வருமானமே 47 ஆயிரம் யூரோவாக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 41 லட்ச ரூபாய். ஆனால் அங்குள்ள வீடுகள் விலை அதை விட அதிகமாக இருக்கிறது. ஒரு சதுர மீட்டரே 13 ஆயிரம் யூரோ அதாவது 11 லட்சமாக இருக்கிறது. வாடகையும் கூட நடுத்தர வர்க்கத்தினரால் எட்டவே முடியாத அளவுக்கு இருக்கிறது. லக்சம்பர்க் சின்ன நாடாக இருப்பதால் எளிதாகப் பயணிக்கலாம். இதன் காரணமாக அங்குள்ள பெரும்பாலான மக்கள் லக்சம்பர்க்கை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் உள்ளனராம்.
மேலும், பொது போக்குவரத்து இலவசம் என்பதால் அவர்களால் எளிதாக வேலைக்குச் செல்ல முடிகிறது. இதனால் சுமார் பெரும்பாலானோர் அண்டை நாடுகளில் எல்லைப் பகுதிகளில் இருந்தே வந்து செல்கிறார்களாம். இருப்பினும், வரி உள்ளிட்டவற்றில் இருந்து அரசுக்கு வருமானம் கிடைப்பதால் இப்போது வரை அங்கே பெரிய பிரச்சினைகள் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications