ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் ஈரான் மக்கள்.. என்ன காரணம்?
தெஹ்ரான்: ஈரான் அதிபர் ரைசி மரணத்தால் அந்நாட்டு மக்களில் ஒரு தரப்பினர் சோகத்தில் இருந்தாலும் மற்றொரு தரப்பினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடி இருக்கிறார்கள்.. ஒரு அதிபரின் மரணத்தைச் சொந்த நாட்டு மக்களே கொண்டாடுவது ஏன் என்பது குறித்து நாம் பார்க்கலாம்
ஈரான் நாட்டின் அதிபரான இப்ரஹிம் ரைசி அஜர்பைஜான் சென்றுவிட்ட திரும்பிய நிலையில், அப்போது அவரது ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. அவரது ஹெலிகாப்டர் மலையில் மோதியுள்ளது.

இதில் இப்ரஹிம் ரைசி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிபர் ரைசியின் மரணத்திற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் ஈரான் நாட்டிலும் சரி சர்வதேச அளவிலும் சரி ஒரு தரப்பினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
கொண்டாட்டம்: இது தொடர்பாகப் பல சமூக வலைத்தள பதிவுகளை நம்மால் பார்க்க முடியும். யாராவது உயிர் பிழைத்தால் பொதுமக்கள் கவலைப்படும் ஒரே விபத்தாக இது இருக்கும் என்று ஈரானிய அமெரிக்கப் பத்திரிகையாளர் மசிஹ் அலினெஜாட் பதிவிட்டுள்ளார். அதேபோல ஈரான் நாட்டை சேர்ந்த சிலர் "உலக ஹெலிகாப்டர் தின வாழ்த்துகள்!" என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.
ஹெலிகாப்டர் விபத்து பற்றிய செய்திகள் வெளியான போது இப்ராஹிம் ரைசி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெஹ்ரான் மற்றும் மஷாத் நகரின் முக்கிய சதுக்கங்களில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடினர். அதேநேரம் மறுபுறம் பல ஆயிரம் ஈரானியர்கள் இந்த செய்தியைக் கொண்டாடுவதையும் காண முடிந்தது. இதை ஈரான் நாட்டை சேர்ந்த மக்கள் வெளிப்படையாகவே தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். சில இடங்களில் பட்டாசுகள் கூட வெடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்ன காரணம்: ஆனால் அதிபர் பதவியில் இருக்கும் ஒருவர் விபத்தில் உயிரிழப்பதைக் கண்டு ஈரான் மக்கள் கொண்டாடுவது ஏன் என்ற கேள்வி பலருக்கும் வரலாம்.. அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
63 வயதான ரைசியை பலரும் ஈரான் நாட்டின் கொடூர கொலைகாரர் என்றே அழைக்கிறார்கள். ஏனென்றால் 1988இல் ஈரான்- ஈராக் போருக்குப் பின் அரசியல் கைதிகள் பலர் தூக்கிலிடப்பட்டதில் இவருக்கும் முக்கிய பங்கு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. சுமார் 5000 கைதிகளின் மரண தண்டனைக்கு இவர் காரணமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கடுமையான சட்டங்கள்: மேலும், 2021இல் ஈரான் அதிபராகப் பொறுப்பேற்ற ரைசி, உடனடியாக கலாச்சார சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. மேலும், போராட்டக்காரர்கள் ஒடுக்கப்பட்டன. தீவிர வலதுசாரியான ரைசி பேச்சு சுதந்திரத்தில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். மேலும், ஹிஜாப் உள்ளிட்ட கலாச்சார சட்டங்களைக் கடுமையாக்கி, அதைக் கண்காணிக்கக் கலாச்சார காவலர்களை நியமித்தார்.
போராட்டங்கள்: இவரது ஆட்சியில் தான் கடந்த 2022 ஈரான் நாட்டில் மஹ்ஸா அமினி என்ற 22 வயது பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று அந்நாட்டின் கலாச்சார காவலர்களால் அடித்தே கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து மிகப் பெரியளவில் போராட்டங்கள் நடந்த நிலையில், அதையும் அடக்குமுறை மூலமாகவே ஒடுக்கினார். அதில் பல நூறு பேர் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன் காரணமாகவே ஈரான் நாட்டிலேயே ஒரு தரப்பினர் இவரது மரணத்தைக் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக மஹ்ஸா அமினி மரணத்தைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இவரது மரணத்தைக் கொண்டாடும் வகையில் போட்டோக்களையும் பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications