இஸ்ரேல் நிலை மோசம்.. உள்ளே புகுந்த சிரியா! திடீர் ஏவுகணை தாக்குதல்.. 50 ஆண்டு பகை தெரியுமா! பின்னணி
டெல் அவிவ்: இஸ்ரேல்- ஹமாஸ் படையினருக்குத் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இடையில் புகுந்த சிரியாவும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
இஸ்ரேல் நாட்டிற்கும் ஹமாஸ் படைக்கும் இடையே தொடங்கிய யுத்தம் 6ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது கடந்த சனிக்கிழமை இந்த மோதல் தொடங்கிய நிலையில், இரு தரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஏற்கனவே 2000+ கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இரு தரப்பிலும் பல ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
தாக்குதல்: இதற்கிடையே கடந்த செவ்வாய்க்கிழமை சிரியாவும் இதில் இணைந்துள்ளது. சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது ஷெல் தாக்குதல் நடந்துள்ளது. , சிரியாவிலிருந்து வடக்கு இஸ்ரேலை நோக்கி ஏராளமான சிறிய ஷெல் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளது. இருப்பினும், அவை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விழுந்ததால் யாருக்கும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இஸ்ரேல்- ஹமாஸ் படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது சிரியாவில் இருந்தும் தாக்குதல் அரங்கேறியுள்ளது நிலைமையை மோசமாக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. போர் மேலும் மோசமாவதைத் தடுக்கவும் இஸ்ரேல் எதிரிகளை எச்சரிக்கும் வகையிலும் கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியில் அமெரிக்கா விமானம் தாங்கி கப்பலை அனுப்பியுள்ளது.
அதேநேரம் இஸ்ரேல் மீது சிரியா தாக்குதல்களை நடத்துவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களிலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால், இவை பெரும்பாலும் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலேயே இந்த சிறிய ஷெல் ஏவுகணைகள் விழும். சிரியாவும் கூட இதை வெறுமன எதிர்ப்பை தெரிவிக்கும் அடையாள தாக்குதலைப் போலவே பயன்படுத்தும்.
என்ன காரணம்: இப்படிதான் கடந்த ஏப்ரல் மாதம் இஸ்லாத்தின் புனிதத் தலங்களில் ஒன்றான அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேல் போலீசார் ரெய்டு நடத்தினர். அப்போதே இதற்கு சிரியா மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது மேலும், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் நாட்டில் இருந்து சில ஏவுகணைகள் ஏவப்பட்டன. இப்படி சிரியாவில் இருந்து சிறு சிறு தாக்குதல்கள் வருவது வழக்கமான ஒன்றுதான். இரு நாடுகளுக்கும் இடையே அரை நூற்றாண்டிற்கும் மேலாக இருக்கும் மோதலே இதற்குக் காரணமாகும்.
50 ஆண்டு பகை: இப்படி மோதிக்கொள்ளும் இஸ்ரேல் மற்றும் சிரியா என இரு நாடுகளும் ஒரு காலத்தில் ஒட்டோமான் பேரரசின் கீழ் தான் இருந்தன. முதலாம் உலகப் போருக்குப் பிறகு, அவை தனித்தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டன. அப்போது 1948இல் இஸ்ரேல் யூதர்களுக்கான நாடாக நிறுவப்பட்டது. இருப்பினும், அங்குள்ள பாலஸ்தீன மக்கள் தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அங்கே முதலில் மோதல் உருவானது.
இதில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அரபு நாடுகள் களமிறங்க 1948, 1967, மற்றும் 1973 ஆண்டுகளில் மூன்று போர்கள் நடைபெற்றன. இதில் ஒவ்வொரு போரிலும் இஸ்ரேல் நாட்டிற்கே வெற்றி கிடைத்து. இஸ்ரேல் புதிய பகுதிகளை ஆக்கிரமிக்கவும் செய்தது. அப்போது 1967இல் நடைபெற்ற ஆறு நாள் போர் தான் சிரியாவுக்கும் இஸ்ரேல் நாட்டிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட இதுவே முக்கிய காரணம்.
கோலன் ஹைட்ஸ்: தென்மேற்கு சிரியாவில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதி முதலில் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருந்தது. இருப்பினும், 1967 போரில் இந்த பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. உயரமான இடத்தில் அமைந்துள்ளதால் கோலன் ஹைட்ஸ் ராணுவ ரீதியாக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அங்கே ராணுவ கண்காணிப்பு பணிகளை மிக எளிதாகச் செய்ய முடியும். இந்த முக்கிய பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதே முக்கிய காரணமாகும்.
இப்போது வரை இந்த பகுதி இஸ்ரேல் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. இந்த விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடந்த போதிலும் எதிலும் சுமுகமான தீர்வு ஏற்படவில்லை. இந்த இஸ்ரேல் சிரியா மோதலில் ஈரான் நாட்டிற்கும் தொடர்பு இருக்கவே செய்கிறது.
கேம் ஆடும் ஈரான்: அது என்னவென்றால் 1979இல் ஈரானில் நடந்த இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், இஸ்ரேல் எதிரி நாடாக அறிவிக்கப்பட்டது. அந்த பகுதியில் இஸ்ரேல் ஆதிக்கம் செலுத்தி அச்சுறுத்த முயல்வதாகச் சொல்லி ஈரான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. அப்போது முதலே இஸ்ரேலுக்கும் ஈரான் நாட்டிற்கும் ஏழாம் பகை தான்.
இதற்கிடையே 2011இல் சிரியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட்ட நிலையில், இந்த குழப்பத்தை ஈரான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. சிரியாவில் ஈரான் அதன் ராணுவ தளங்களை ஏற்படுத்திக் கொண்டது. உள்நாடு போரால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு ஈரான் உதவிகள் முக்கியமானது. இதை வைத்து மறைமுகமாக அழுத்தம் தரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த சிரியாவை ஈரான் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே இப்போதும் இஸ்ரேல் ஹமாஸ் படையைச் சமாளிக்கப் போராடி வரும் நிலையில், இடையில் புகுந்த சிரியா தனது பங்கிற்கு வழக்கம் போல ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளது. இது எந்தவொரு தீவிர பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட இதே நிலை தொடர்ந்தால் எங்கு மற்ற நாடுகளும் தலையீட்டு இந்த போர் அந்த பிராந்தியம் முழுக்க பரவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.











Click it and Unblock the Notifications