வயிற்றுக்குள் கருவி பொருத்தி கண்காணிப்பு: பாகிஸ்தான் கணவன் மீது மனைவி வழக்கு
லாகூர்: ‘டிராக்கர்' எனப்படும் கண்காணிப்பு கருவியை வயிற்றுக்குள் பொருத்தியதாக பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் இளம்பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
லாகூரில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
எனக்கும் முகம்மது பயாஸ் என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஒரு நாள் இரவு மாஜிஸ்திரேட் அக்ரம் ஆசாத் என்பவருடன் குடி போதையில் வந்த என் கணவர் என்னை அந்த மாஜிஸ்திரேட்டுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தினார்.
இதற்கு நான் மறுத்ததால், என் கணவரின் ஒத்துழைப்புடன் மாஜிஸ்திரேட் என்னை பலவந்தமாக கற்பழித்தார். இச்சம்பவத்துக்குப் பிறகு பல ஆண்களை வீட்டுக்கு அழைத்து வந்த அவர், தன் கண் முன்னால் அவர்களால் நான் கற்பழிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பதில் இன்பம் அடைந்தார்.
இப்படி, பலருக்கு என்னை அவர் விருந்தாக்கியதால், வெறுத்துப் போன நான் அவரை விட்டுப் பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். ஒரு நாள் சமாதானம் பேசுவதாக சிலருடன் வந்த அவர் என் முகத்தில் ஒருவித நச்சுப் புகையை பாய்ச்சினார். நான் மூர்ச்சையாகி விட்டேன்.
கண் விழித்துப் பார்த்தபோது, ஒரு தனியார் மருத்துவமனை கட்டிலில் கிடந்தேன். அடி வயிற்றில் தையல்கள் போடப்பட்டிருந்தது. கடுமையான வலியும், வேதனையும் ஏற்பட்டது.
அங்கிருந்த ஒரு டாக்டரின் உதவியுடன் ‘எக்ஸ்-ரே' எடுத்துப் பார்த்ததில் வாகனங்கள் எங்கிருக்கிறது? என்பதை கண்டுபிடிக்கும் ‘டிராக்கர்' எனப்படும் கண்காணிப்பு கருவியை என் வயிற்றுக்குள் பொருத்தியுள்ளது தெரிய வந்தது.
நான் எங்கே இருக்கிறேன்? என்ன செய்கிறேன்? என்று கண்காணிப்பதற்காக இத்தகைய கீழ்த்தரமான காரியத்தில் ஈடுபட்ட முகம்மது பயாஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி உள்ளூர் போலீசாரிடம் நான் அளித்த புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் மனுவை விசாரித்த காசியாபாத் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications