இத்தாலி பெண்ணுக்கு பொருத்தப்பட்ட உலகின் முதல் தொடுவுணர்வுடைய செயற்கை கை
உலகிலேயே முதல் முறையாக தொடும் பொருட்களை உணரும் தன்மை உடைய செயற்கை கை ஒன்றை உயிர்மின்னணுவியல் தொழில்நுட்பம் மூலம் இத்தாலியில் உள்ள அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
சுமார் கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த வாகன விபத்து ஒன்றில் தனது இடது கையை இழந்த அல்மரினா மஸ்கரெல்லோ எனும் பெண்மணிக்கு அந்தக் 'கை' பொருத்தப்பட்டுள்ளது. "இழந்த கை மீண்டும் கிடைத்ததை போல் உள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.
இந்தக் கையை உருவாக்கிய இதே ஆராய்ச்சியாளர்கள் குழுவினர், கடந்த 2014-ஆம் ஆண்டிலேயே தொடு உணர்வு உள்ள செயற்கை கை ஒன்றை உருவாக்கினார்கள்.
- பழங்கால அமெரிக்கர்கள் கதையை கூறும் 11,500 ஆண்டுகளுக்கு முந்தைய டி.என்.ஏ
- விநோத விண் கல்லில் வேற்றுக்கிரகச் சுவட்டைத் தேடும் ஆய்வு
எனினும், அந்தக் கையுடன் பொருத்தப்பட்டிருந்த தொடு உணர்வை உள்வாங்கும் கருவி (சென்சார்) மற்றும் கணிப்பொறி ஆகியன அளவில் பெரியதாக இருந்ததால், அதை ஆய்வகத்துக்கு வெளியில், அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் சாத்தியங்கள் இல்லாமல் போனது.
அதே கருவிகளை ஒரு தோள் பையில் சுமந்து செல்லும் அளவுக்கு சிறிய அளவில் தற்போது உருவாக்கியுள்ளனர் அந்தக் குழுவினர்.
இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், நரம்பியல் வல்லுநர்கள், மின்னணுவியல் மற்றும் ரோபோடிக் வல்லுநர்கள் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அந்த செயற்கைக் கையால் தொடப்படும் பொருள் மென்மையானதா, வன்மையானதா என்பதை அறியும் உணர் கருவி அத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.
அந்தக் கருவி, அத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிறிய கணிப்பொறிக்கு அனுப்பும் சமிக்ஞை மூலம் மூளை அப்பொருளைத் தொடுவதை உணரும் வகையில் அந்தக் கை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆய்வக சோதனைகளின்போது அல்மரினாவின் கண்கள் கட்டப்பட்டிருந்தாலும், தான் என்ன பொருளைத் தொடுகிறேன் என்பதை அவர் சரியாகக் கூறியுள்ளார்.
எனினும், அது இன்னும் சோதனை நிலையிலேயே இருப்பதால் அல்மரினாவுக்கு அந்த செயற்கை கை ஆறு மாதங்களே பொருத்தப்பட்டிருந்தது. ஆய்வுகள் முழுமை செய்யப்பட்ட பின்பு, அந்தக் கையை மீண்டும் பொருத்திக்கொள்ள அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
- டிரம்பின் மனநலம் எப்படி இருக்கிறது? சர்ச்சை நூலால் பரபரப்பான விவாதம்
- ஓட்காவை காலி செய்து ரூ.8 கோடி மதிப்புள்ள தங்க பாட்டிலை வீசிச் சென்ற திருடர்
- கழிவறையை அசிங்கம் செய்த பயணியால் பாதியில் தரை இறங்கிய விமானம்