உதவிக்கு வந்தது உலக வங்கி.. இந்தியாவுக்கு 1 பில்லியன் டாலர் அவசர நிதியுதவி
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவலை சமாளிக்க இந்தியாவுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் அவசர நிதியுதவிக்கு உலக வங்கி வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் 2,500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. உலக வங்கியின் முதல் உதவித் திட்டங்கள், 1.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு வெளியாகியுள்ளன. 25 நாடுகளுக்கு இது உதவும்.

"இந்தியாவிற்கு வழங்கப்படும், 1 பில்லியன் அமெரிக்க டாலர் அவசர நிதி, சிறந்த ஸ்க்ரீனிங், தொடர்பு டிரேசிங் மற்றும் ஆய்வக பரிசோதனைகளுக்கு உதவும். தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது, புதிய தனிமைப்படுத்தும் வார்டுகளை அமைப்பது போன்றவற்றுக்கும் உதவும்" என்று உலக வங்கி கூறியுள்ளது.
உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தெற்காசியாவில், உலக வங்கி பாகிஸ்தானுக்கு 200 மில்லியன் அமெரிக்க டாலர்களும், ஆப்கானிஸ்தானுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களும், மாலத்தீவுக்கு 7.3 மில்லியன் அமெரிக்க டாலர்களும், இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டாலர்களும் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
அடுத்த 15 மாதங்களில் 160 பில்லியன் அமெரிக்க டாலர் வரை வழங்குவதாக உலக வங்கி கூறியுள்ளது, இது தொற்றுநோயை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு உதவும். பொருளாதார மேம்பாட்டுக்கும் உதவும்.












Click it and Unblock the Notifications