நொடிகளில் தரைமட்டமான காசா மருத்துவமனை! 500 பேர் பலியான கொடூரம்.. இஸ்ரேலுக்கு உலக நாடுகள் கண்டனம்
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் தொடரும் நிலையில், இன்று காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டில் கடந்த 10 நாட்களாக யுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த அக். 8ஆம் தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் படை முதலில் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையே இப்போது காசா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல்: பொதுவாக என்ன தான் போர் என்றாலும் மருத்துவமனைகளில் தாக்குதல் நடத்தப்படாது. இதன் காரணமாகவே அப்பாவி மக்கள் மருத்துவமனைகளில் தஞ்சம் புகுவார்கள். ஆனால், இஸ்ரேல் காசாவில் உள்ள இருந்த மருத்துவமனையில் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதில் 500 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் ஜோர்டானில் இருந்த நிலையில், இந்த கொடூர தாக்குதல் குறித்த தகவல் கிடைத்தவுடன் அவர் மேற்கு கரைக்குத் திரும்பினார். மேலும், புதன்கிழமை அமெரிக்க அதிபருடன் நடக்கவிருந்த மீட்டிங்கும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு அரபு நாடுகள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கண்டனம்: காசாவில் உள்ள அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த கத்தார், இது மிருகத்தனமான படுகொலை என்றும் சர்வதேச விதிகளை இஸ்ரேல் அப்பட்டமாக மீறியுள்ளதாகவும் சாடியுள்ளார்.
மிருகத்தனமான தாக்குதல்: அதேபோல துருக்கி அதிபர் எர்டோகனும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "காசாவில் இஸ்ரேலில் நடத்தும் மிருகத்துத்தை நாம் அனைவரும் இணைந்து தடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
காசா மருத்துவமனையை மீதான இஸ்ரேல் தாக்குதலை 'போர் குற்றம், இனப்படுகொலை' என்று குறிப்பிட்டு ஓமன் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதல்களை மேற்குலக நாடுகள் உடனடியாக டுக்க வேண்டும் என அரபு லீக் தலைவர் அஹ்மத் அபுல் கெயிட் வலியுறுத்தியுள்ளார். அதேபோல ஜோர்டான், எகிப்து, துருக்கி உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளும் இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பேரழிவு: காசாவில் இருந்து வரும் தகவல்கள் பேரழிவு தருவதாகக் கூறியுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் எப்போதும் மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். அரபு நாடுகள் மட்டுமின்றி உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு, "பாலஸ்தீனப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுகாதார ஊழியர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காசாவில் முழு வீச்சில் செயல்பட்டு வந்த மருத்துவமனையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
உலக நாடுகள்: காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், கடந்த சில நாட்களாக இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனச் சர்வதேச சமூகத்தைக் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல யுனிசெப் அமைப்பும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், காசா பகுதியில் உள்ள குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications