உலகிலேயே அதிக எடைகொண்ட மனிதர் 38 வயதில் ஹார்ட் அட்டாக்கால் மரணம்
மெக்சிகோ: உலகிலேயே அதிக எடை உடையராக அறியப்படும் மெக்சிகோவைச் சேர்ந்த ஆன்ரிஸ் மொரேனோ மாரடைப்பால் காலமானார்.
உடல் பருமன் என்பது சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இயந்திரங்களின் துணை கொண்டு பெரும்பாலான வேலைகள் நடத்தப்படுவதால், மனிதர்களுக்கு உடல் உழைப்பு குறைந்து உடல் பருமனால் அவதிப் படுகின்றனர். ஆனால், சிலர் உடல்நலக் குறைப்பாடு காரணமாகவும் அதிக எடையைப் பெறுகின்றனர்.

அந்தவகையில், மெக்சிகோவில் சொனோரா மாகாணத்தை சேர்ந்தவர் ஆன்ரிஸ் மொரேனோ (38). 444 கிலோ எடை கொண்ட இவர், உலகிலேயே அதிக எடை கொண்டவராக கருதப்படுகிறார்.
அதிக எடையால் சிரமப்பட்டு வந்த ஆன்ரிஸுக்கு கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி எடையைக் குறைக்க அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. அப்போது அவரது வயிற்றுப் பகுதியில் இருந்து நான்கில் மூன்று மடங்கு அகற்றப்பட்டது. அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து அவர் 320 கிலோ எடை ஆனார்.
அதிகம் சாப்பிட இயலாத அளவிற்கு வயிற்றின் அளவு குறைக்கப்பட்டதால், சிகிச்சைக்குப் பின்னர் ஆன்ரிஸ் ஆரோக்கியமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் நாளன்று ஆன்ரிஸுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
உயிரிழந்த ஆன்ரிஸ் முன்னாள் காவல்துறை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications