சீனா கூறியதைவிட அந்நாட்டில் 10 மடங்கு அதிகமாக கொரோனா பாதிப்பு... இரண்டாம் அலை ஏற்படும் அபாயம்
பெய்ஜிங்: சீனாவின் வூஹான் நகரில் சீனா முன் கூறியதைவிட கொரோனா பாதிப்பு 10 மடங்கு அதிகமாக இருப்பதாகச் சமீபத்தில் நடத்தப்பட்ட செரோலாஜிகல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
வூஹான் நகரில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவுடன், நகர் முழுவதும் மிகக் கடுமையான ஊரடங்கைச் சீனா அமல்படுத்தியது. இதன் காரணமாக விரைவில் சீனா இயல்பு நிலைக்குத் திரும்பியது.

புதிய ஆய்வு
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் வூஹான் நகரில் நடத்தப்பட்ட செரோலாஜிகல் ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. சுமார் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நகரில் இருக்கும் சுமார் 4.4% பேருக்கு கொரோனா ஆன்ட்டிபாடி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

10 மடங்கு அதிகம்
அதாவது வூஹான் நகரில் மட்டும் கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. ஆனால், வூஹான் நகரில் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பதாகச் சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. சீன அரசு கூறியதைவிட சுமார் 10 மடங்கு அதிகமாக வூஹானில் கொரோனா பாதிப்பு இருப்பது, இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மற்ற பகுதிகளில் குறைவு
அதேநேரம் சீனாவின் மற்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு மிகக் குறைவாக இருப்பதும் இதில் தெரிய வந்துள்ளது. ஹூபே மாகாணத்தில் ஒட்டுமொத்தமாக 0.44% பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மற்ற ஆறு நகரங்களில் சுமார் 12 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட ஆய்வில் இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது.

மீண்டும் இரண்டாம் அலை
இருந்தாலும்கூட சீனாவில் கொரோனா இரண்டாம் அலை ஏற்படுவதற்கான ஆய்வுகள் மிக அதிகம் என்றே ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். Herd immunity எனப்படும் சமூக தடுப்பாற்றால், ஒரு நகரில் இருக்கும் 50% மக்களின் உடலில் ஆன்ட்டிபாடி இருந்தால் மட்டுமே ஏற்படும். ஆனால், இதைவிட வூஹானில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளதால் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது.

மற்ற நாடுகளில் எவ்வளவு
இதேபோல ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் நடத்தப்பட்ட செரோலாஜிகல் ஆய்வில் முறையே 6.2%, 11% கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இது வூஹானில் கண்டறியப்பட்ட பாதிப்பைவிட அதிகம் என்றாலும்கூட, அந்த நாடுகளிலும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications