"ஆள் இல்லா"க் காட்டில் வாத்தியார் வேலை காலியா இருக்கு.. சம்பளம் ரூ. 35 லட்சம்.. நீங்க ரெடியா?
எடின்பர்க்: இங்கிலாந்து அருகே உள்ள "தீபகற்ப" கிராமத்தில் ஐந்தே மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ஆசிரியர் வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லையாம். சம்பளமாக ஆண்டுக்கு ரூ. 35 சம்பளம் கொடுப்பதாகக் கூறியும் யாரும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கவில்லையாம்.
இங்கிலாந்தில் உள்ளது ஸ்கோரெய்க் என்ற தீபகற்ப கிராமம். இந்தக் கிராமத்திற்கு படகில் மட்டுமே செல்ல முடியும். வனப்பகுதி, தீவு என இயற்கை எழில் கொஞ்சும் இந்தக் கிராமத்தில் நாற்பது குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கு மருத்துவமனை, தபால் நிலையம் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் தபால்காரர் வருவாராம்.
ஒரு பள்ளி.. 5 மாணவர்கள்
இங்கு ஒரு பள்ளியும் உள்ளது. அதில் ஐந்து மாணவர்கள் உள்ளனர். ஆனால், இவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆசிரியர்தான் இல்லை. தற்போது இந்தப் பள்ளியின் மாணவர்களுக்கு, அவ்வப்போது வெளியில் இருந்து வந்து மாணவர்களே வகுப்பெடுக்கின்றனர்.
ரூ. 35 லட்சம் சம்பளம்...
இந்த ஆசிரியர் பணிக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு முப்பத்தந்து ஆயிரம் பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் 35 லட்ச ரூபாய்) என இரண்டு முறை ஆசிரியர் தேவை விளம்பரம் அளித்தும் யாரும் விண்ணப்பிக்க முன்வரவில்லை.
தீபகற்ப பள்ளி...
எளிதில் வந்து போக முடியாத அளவிலான தொலை தூர கிராமம் என்பதால் யாரும் வேலைக்கு வரத் தயங்குகிறார்களாம். ஸ்காட்லாந்து தீபகற்பப் பகுதியில் இது இருப்பதால் இதற்குத் தீபகற்பப் பள்ளி என்றும் பெயர்.
தொலைதூரத்தில் உள்ளது...
இந்தப் பள்ளிக் கூடத்திற்கு பிரிட்டனின் மிகவும் தொலை தூரத்தில் உள்ள பள்ளி என்ற பெயரும் கிடைத்துள்ளது. இங்குள்ள மக்கள் இப்பகுதியிலேயே தங்களுக்குத் தேவையானதை உருவாக்கிக் கொள்வதால் அவர்களும் அதிக அளவில் வெளியில் செல்வதில்லையாம்.