எங்க பெண்களை சீரழித்து, எங்க நாட்டையே ஆக்கிரமிப்பீர்களா... சொல்லிச் சொல்லி சுட்ட அமெரிக்கர்!
சார்ல்ஸ்டன்: எங்கள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதுடன் எங்கள் நாட்டையே ஆக்கிரமித்துக் கொள்வீர்களா என்று சொல்லி சொல்லி தெற்கு கரோலினா தேவாலயத்தில் இருந்த கருப்பினத்தவர்களை டிலன் ரூப் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள சார்ல்ஸ்டன் நகரில் இருக்கும் பிரபல இமானுவல் ஆப்பிரிக்க மெதடிஸ்ட் எபிஸ்கோபல் தேவாலயத்தில் கடந்த புதன்கிழமை மாலை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. பிரார்த்தனை கூட்டம் நடந்தபோது கருப்பினத்தவர்களின் தேவாலயத்திற்குள் புகுந்த வெள்ளை இனத்தைச் சேர்ந்த டிலன் ரூப்(21) துப்பாக்கியால் கணமூடித்தனமாக சுட்டார்.
இதில் கருப்பினத்தைச் சேர்ந்த பாதிரியார் உள்பட 9 பேர் பலியாகினர். பலியான 9 பேரில் 6 பேர் பெண்கள், 3 பேர் ஆண்கள். எங்கள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதுடன் எங்கள் நாட்டையே ஆக்கிரமித்துக் கொள்வீர்களா என்று சொல்லி சொல்லி டிலன் சுட்டுள்ளார். அவர் தனது துப்பாக்கியை 5 முறை லோட் செய்து சுட்டுள்ளார். எங்களை விட்டுவிடுங்கள் என்று தேவாலயத்தில் இருந்தவர்கள் கெஞ்சியும், கதறியும் அவர் கேட்கவில்லை என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த 24 மணிநேரத்திற்குள் டிலனை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.