"உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து விலக தயார், ஆனால்.." ஜெலன்ஸ்கி போட்ட ஒரே கண்டிஷன்.. பரபர அறிவிப்பு
கீவ்: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தான் உக்ரைனை வழிநடத்தி வருகிறார். இதற்கிடையே உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக ஜெலன்ஸ்கி பரபர அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு திடீரென தாக்குதலை ஆரம்பித்தது. அப்போது தொடங்கிய மோதல் 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இது சர்வதேச அளவிலும் கூட பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
இதனால் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பல்வேறு உலக நாடுகளும் முயன்றன. இருப்பினும், எதுவும் பெரியளவில் பலன் தரவில்லை. இதற்கிடையே அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, போர் நிறுத்தம் குறித்த பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன. இருப்பினும், உக்ரைன் போர் குறித்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு இல்லை என்பது பேசுபொருள் ஆகியுள்ளது.
இந்தச் சூழலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில பரபர அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். அதாவது உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி அளித்தால் உடனடியாக அதிபர் பதவியில் இருந்து விலகத் தயார் என அறிவித்துள்ளார்.
பதவி விலகத் தயார்
இது தொடர்பாகத் தலைநகர் கீவ் நகரில் நடந்த பிரஸ் மீட்டில் பேசிய ஜெலன்ஸ்கி, "உக்ரைனுக்கு அமைதி திரும்ப.. நான் எனது பதவியை விட்டு நிஜமாகவே விட்டுத் தர வேண்டும் என்றால் அதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன்.. உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் நான் அதிபர் பதவியை விட்டு விலகத் தயாராகவே இருக்கிறேன்.
டிரம்ப் புரிந்து கொள்ள வேண்டும்
மேலும், நான் டிரம்பிடம் சில விஷயங்களைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உக்ரைனின் நிலைப்பாட்டை டிரம்ப் புரிந்து கொள்ள வேண்டும். ரஷ்யாவின் தாக்குதலால் நாங்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, டிரம்ப் ரஷ்யாவிடம் இருந்து எங்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மத்தியஸ்தனம் செய்யும் நபராக மட்டும் டிரம்ப் இருக்கக்கூடாது.
இந்த பிராந்தியத்தில் அமைதி திரும்ப உக்ரைனின் கூட்டாளியாக டிரம்ப் இருக்க வேண்டும். இதை டிரம்ப் புரிந்து கொள்வோர் என நம்புகிறேன். அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் எங்களுக்குக் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது" என்றார்.
நேட்டோ அமைப்பு
உக்ரைனைப் பொறுத்தவரை அது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைய ஆர்வம் காட்டி வந்தது. ஆனால், உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அந்த படைகள் ரஷ்யாவின் எல்லைக்கு மிக அருகே வந்துவிடும். உக்ரைன் நேட்டோவில் இணைய இணையும் முயற்சியை எடுத்த போது தான் ரஷ்யா ஆத்திரம் கொண்டு தாக்குதலைத் தொடங்கியது. உக்ரைன் நேட்டோவில் இணைவது தனது நாட்டிற்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலாகவே இருக்கும் என புதின் பார்க்கிறார்.
உக்ரைன்
மறுபுறம் நேட்டோவில் இணைவது தங்களுக்கு ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்து பாதுகாப்பைத் தரும் என உக்ரைன் கருதுகிறது. ஏனென்றால் நோட்டோ நாடுகளுக்கு நேட்டோ படைகள் பாதுகாப்பு தரும். குறிப்பாக நேட்டோ உறுப்பு நாட்டை யாராவது தாக்கினால் பதிலாக அனைத்து நேட்டோ நாடுகளும் ஆதரவாக வரும். இது தனக்கான பாதுகாப்பைத் தரும் என உக்ரைன் கருதுகிறது.












Click it and Unblock the Notifications