தீயாய் பரவும் ஜிக்கா வைரஸ்: சர்வதேச அளவில் அவசர நிலையை அறிவித்த உலக சுகாதார அமைப்பு
ஜெனிவா: ஜிக்கா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் சர்வதேச அளவில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது உலக சுகாதார அமைப்பு.
தென் அமெரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் ஜிக்கா வைரஸ் பிற நாடுகளுக்கும் மெல்ல, மெல்ல பரவுகிறது. தென் அமெரிக்காவில் ஏராளமானோர் ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜிக்கா வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது உலக சுகாதார அமைப்பு. மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் பரவியபோது நடவடிக்கை எடுக்க தாமதமாகியதை அந்த அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் மார்கரெட் சான் கூறுகையில்,
ஜிக்கா வைரஸால் உலகின் பிற பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உலக அளவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளை யும், குழந்தைகளையும் பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்படும். கொசுக்கள் பெருகுவதை தடுக்க வேண்டும் என்றார்.
அமெரிக்காவில் ஜிக்கா வைரஸ் படுவேகமாக பரவி வருவதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 40 லட்சம் பேர் அந்த வைரஸால் பாதிக்கப்படக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் எச்சரித்திருந்தது.
ஜிக்கா வைரஸ் முதன்முதலாக 1947ம் ஆண்டு உகாண்டாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications