900 நாட்களை கடந்து போராடும் பரந்தூர் மக்களை சந்திக்கும் விஜய்! 4 கன்டிஷன்கள் போட்ட போலீஸ்
காஞ்சிபுரம்: பரந்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் அக்கிராம மக்களை தவெக தலைவரும் நடிகருமான விஜய் சந்திக்கும் நிலையில் அவருக்கு 4 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
சென்னைக்கு 2ஆவது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் உள்ள 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் கிட்டதட்ட 900 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த போராட்டத்தில் ஈடுபடும் மக்களை நேரில் சந்திக்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூருக்கு வருகிறார்கள். இதற்காக காஞ்சிபுரம் காவல் அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. போலீஸார் தரப்பில் சில நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது.
முதலில் பரந்தூர் ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் சந்திக்க தவெக அனுமதி கோரியிருந்தது. ஆனால் அது திறந்தவெளி மைதானம் என்பதால் அங்கு அனுமதி மறுக்கப்பட்டு அதற்கு பதிலாக அருகில் உள்ள வீனஸ் எனும் தனியார் திருமண மண்டபத்தில் அனுமதி தரப்பட்டுள்ளது.
- காவல் துறை கட்டுப்பாடுகள்: பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களின் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்.
- சட்டம், ஒழுங்கைப் பேண காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
- திட்டமிட்டபடி காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட வேண்டும்.
- பொதுமக்களுக்கோ பொது சொத்திற்கோ எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
மேற்கண்ட 4 நிபந்தனைகளுடன் பரந்தூர் வீனஸ் திருமண மண்டபத்தில் இன்று கிராம மக்களை விஜய் சந்திக்கிறார். மேலும் கட்சியின் குறிப்பிட்ட நிர்வாகிகளை தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.
அரசியல் கட்சி தொடங்கியதும் அவர் பனையூர் அலுவலகத்தை விட்டு வேறு எங்கும் மக்களை சந்திப்பதே இல்லை என்ற விமர்சனம் விஜய் மீதிருந்தது. மேலும் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டிபி சத்திரத்தை சேர்ந்த 300 பேரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து நலத்திட்ட உதவிகளை செய்ததும் பேசு பொருளாக இருந்தது.
இந்த நிலையில் முதல் முறையாக களத்திற்கே சென்று விஜய் மக்களை சந்திப்பதால் இது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பரந்தூர் மக்களை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் விமான நிலைய திட்டம் அவசியம் என அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்றைய தினம் தெரிவித்திருந்தார். அது போல் விஜய் பரந்தூர் செல்வதால் எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என திமுக முதன்மை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications