தனியார் தொழிற்சாலை கேண்டீனில் சாப்பிட்ட 75 பெண்களுக்கு வாந்தி மயக்கம்! ‘ஒரே பீதி’ - என்ன நடந்தது?
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே, தனியார் தொழிற்சாலையில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 70-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கூட்ரோடு பகுதியில், இருசக்கரம் மற்றும் கார்ளுக்கான வயரிங் தயாரிக்கும், தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில், வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.
3 சிறுவர்களின் உயிரை குடித்த கெட்டுப்போன உணவு..பதற்றத்தில் திருப்பூர்.. கலெக்டர் விளக்கம்
இரவு உணவு - வாந்தி மயக்கம்
இந்நிலையில், இத்தொழிற்சாலையில் நேற்று இரவு ஷிப்ட்டில் வேலை செய்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், தொழிற்சாலையில் இயங்கி வரும் கேண்டினில் இரவு நேர உணவை சாப்பிட்டுள்ளனர். இரவு நேர உணவை சாப்பிட்டபோது, அந்த உணவில் பல்லி ஒன்று விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால், பல்லி விழுந்த உணவை உண்டவர்களில் சுமார் 75க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த தொழிற்சாலை நிர்வாகம், வாந்தி மயக்கம் ஏற்பட்ட பெண் தொழிலாளர்களை உடனடியாக மீட்டு, தொழிற்சாலை பேருந்து மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபாத் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சற்று கடுமையாக பாதிக்கப்பட்ட சில பெண்கள், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இரவு நேர ஷிப்ட் நிறுத்தம்
மற்றவர்கள் பொது பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு அங்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும், உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரும் சிகிச்சை பெறவில்லை என தனியார் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த சம்பவம் காரணமாக தொழிற்சாலையில் இரவு நேர ஷிப்ட் உடனடியாக நிறுத்தப்பட்டு, பணிபுரிந்த அனைவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
போலீசார் விசாரணை
மேலும், இது குறித்து தகவலறிந்து தொழிற்சாலையில் பாதுகாப்பிற்காக காஞ்சிபுரம் காவல் உட்கோட்ட டி.எஸ்.பி. ஜூலியர் சீசர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சக தொழிலாளர்கள் அச்சம்
தொழிற்சாலையில் இரவு பணியின்போது, பல்லி விழுந்த உணவு உண்டவர்களில் சுமார் 75 பெண்கள் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது, தொழிற்சாலையில் பணிபுரியும் சக தொழிலாளர்கள் மத்தியில் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.