காஞ்சிபுரத்தில் 6 மாதமாக வாடகை தராததால் மாடி படிக்கட்டை இடித்த வீட்டு உரிமையாளர்.. அடுத்து ட்விஸ்ட்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 6 மாதமாக வீட்டு வாடகை கொடுக்காததால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் மாடிப்படிகளை இடித்து தள்ளி, மின் இணைப்பையும் துண்டித்து விட்டார். இதனால் அந்த வீட்டில் தவித்தவர்களை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டை காலி செய்ய மறுத்தால் பொதுவாக காவல்துறையில் புகார் அளிப்பார்கள். இல்லாவிட்டால சில மாதங்கள் கால அவகாசம் கொடுப்பார்கள். அதேநேரம் வாடகையும் கொடுக்காமல், வீட்டையும் ஆறு மாதமாக காலி செய்ய மறுத்த குடும்பத்தை வீட்டின் உரிமையாளர் வித்தியாசமான முறையில் பழி வாங்கி உள்ளார். அதுவும் தன் சொந்த வீட்டின் படிக்கட்டையே இடித்து அவர்களை வெளியேறுவதற்கான வழிகளை மொத்தமாக காலி செய்து அவர்களை வீட்டை விட்டு வெளியேற வைத்துள்ளார்.

வீட்டின் உரிமையாளர் ஆத்திரத்தில் தன் வீட்டையே இடித்ததால் பல லட்சம் செலவு செய்தால் தான் இயல்பு நிலைக்கு வரும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. வாடகை வீட்டில் குடியிருப்பவரை காலி செய்ய வைக்கவே வீட்டை உரிமையாளர் இடித்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
காஞ்சீபுரம் விளக்கடி பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமான வீட்டின் மாடியில் வேணுகோபால் என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு தங்கி இருந்தார். கடந்த சில வருடங்களாக குடியிருந்து வரும் வேணுகோபால் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வேணுகோபாலுக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டதால் வீட்டிலேயே முடங்கினார். இதனால் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக வீட்டில் குடியிருக்க வாடகை பணம் கொடுக்கவில்லை. வீட்டின் உரிமையாளர் சீனிவாசன் வீட்டை காலி செய்யுமாறு வேணுகோபாலிடம் கூறியிருக்கிறார்.
ஆனால் வாடகைக்கு குடியிருக்கும் வேணுகோபால் வாடகையை உடனே தராமல், வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி விட்டு, வீட்டின் உரிமையாளர் சீனிவாசனிடம் வாடகை செலுத்த காலஅவகாசம் வாங்கி இருக்கிறார். ஆனாலும் சொன்னபடி வேணுகோபால் வாடகை செலுத்தவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வீட்டின் உரிமையாளர் சீனிவாசன் நேற்று மாடி வீட்டுக்கு செல்லும் படிக்கட்டை ஜேசிபியை வைத்து தரைமட்டமாக இடித்துவிட்டார். இதனால் வேணுகோபால் குடும்பத்தினர் மாடியில் இருந்து கீழே இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. அத்துடன் மின் இணைப்பையும் துண்டித்ததுடன், தண்ணீர் இணைப்பும் கட் செய்தார்.
இதனால் வாடகைக்கு குடியிருந்த வேணுகோபால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் நேரில் வந்த பார்த்ததுடன், உடனடியாக காஞ்சீபுரம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாடி வீட்டில் இருந்தவர்களை பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். பின்னர் வேணுகோபால் குடும்பத்தினரை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வாடகையும் கொடுக்காமல், வீட்டையும் ஆறு மாதமாக காலி செய்ய மறுத்த குடும்பத்தை வீட்டின் உரிமையாளர் மாடி படிக்கட்டை இடித்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications