பரந்தூர் போராட்டக் குழுவை சந்தித்த தவெக.. விஜய்-க்கு செல்லும் அறிக்கை.. மக்களை சந்திப்பது எப்போது?
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து போராடி வரும் குழுவினரை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்துள்ள நிலையில், அதனை தவெக தலைவர் விஜயிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு சென்னையில் 2வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பரந்தூரை சுற்றி 5,100 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

இதனை எதிர்த்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 900 நாட்களை கடந்தும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் தமிழக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் 2026 சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து நடிகர் விஜய் கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகிறார்.
இதற்காக நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கூட பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருந்தாலும் தீர்மானத்திற்கு பின் நடிகர் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் எந்த வகையிலான போராட்டத்திலும் ஈடுபடவில்லை. இதனால் வீட்டில் இருந்து வெளி வராமல் விஜயால் அரசியல் செய்ய முடியாது என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தரப்பில் காஞ்சிபுரம் ஆட்சியர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் கிராம மக்களை வரும் 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் ஒருநாள் சந்தித்து தவெக தலைவர் விஜய் பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதன் மூலமாக தவெக தலைவர் விஜய் பரந்தூரில் போராடும் மக்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தவெக நிர்வாகிகளான வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பரந்தூர் போராட்டக் குழுவினரை சந்தித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சந்திப்பின் போது, விவசாயம் பயிரிடப்படும் நிலங்கள் விவரம், நீர் நிலைகள் உள்ளிட்ட தகவல் குறித்து கேட்டறிந்துள்ளனர்.
தொடர்ந்து போராட்டக் குழு கூறிய தகவல்களை அறிக்கையாக தவெக தலைவர் விஜய்-யிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் ஒருநாள் பரந்தூர் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மக்களை சந்திக்க உள்ளது உறுதி என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications