அனைத்து பத்திரிகைகளிலும் முதல்பக்கத்தில் வந்த ஷாக் விளம்பரம்.. மு.க. ஸ்டாலின் செம்ம பதிலடி
சென்னை: கருத்துக்கணிப்புகள் ஆளும்கட்சிக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் வெளிப்பாடாகவே இன்று காலை அனைத்து பத்திரிகைகளிலும் முதல்பக்கத்தில் விளம்பரத்தை கொடுத்திருக்கிறார்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடைசி நாள் பிரச்சாரத்தில் தலைவர்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் 10 திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து மு.க.ஸ்டாலின் சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பிரசாரத்தில் இன்று காலை ஈடுபட்டார். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்து இருந்தனர்.
அந்த பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் 'கருத்துக்கணிப்புகள் ஆளும்கட்சிக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் வெளிப்பாடாகவே இன்று காலை அனைத்து பத்திரிகைகளிலும் முதல்பக்கத்தில் விளம்பரத்தை கொடுத்திருக்கிறார்கள்.
பொய்யான செய்தி
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கட்சி அ.தி.மு.க. அப்படி எங்கள் மீது தவறு இருந்திருந்தால் எங்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த நீங்கள் பொய்யான செய்தியை முதல்பக்கத்தில் விளம்பரம் செய்து மக்களை திசை திருப்பி வெற்றி பெற நினைக்கிறார்கள்.
பொள்ளாச்சி பயங்கரம்
குட்டிக்கரணம் போட்டாலும், ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க வெற்றி பெறாது. அ.தி.மு.க ஆட்சியின் 10 ஆண்டுகளில் நடந்த கொடுமைகளை எல்லாம் மக்கள் மறந்துவிடவில்லை. தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்றது அ.தி.மு.க காவல்துறை. தற்போது பொள்ளாச்சி என்றாலே கை , கால் எல்லாம் நடுங்குகிறது. இளம்பெண்களை எல்லாம் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தது அதிமுக அரசின் முக்கிய பதவியில் உள்ள முக்கிய பிரமுகர் தொடர்புடைய நபர்கள். எஸ்.பிக்கே பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததுதான் அ.தி.மு.க அரசின் சிறப்பு டி.ஜி.பி.எந்த ஆட்சியிலும் சிறப்பு டி.ஜி.பி என்ற பொறுப்பு கிடையாது. இதுபோன்ற பல அவலங்களை மூடி மறைத்துவிட்டு இன்றைக்கு முதல்பக்க விளம்பரம் கொடுத்துள்ளனர்.
சுயமரியாதை
நான் தமிழகத்தின் முதல்வர் ஆகவேண்டும் என்றோ, இந்த தொகுதியில் உதயநிதி எம்.எல்.ஏ ஆகவேண்டும் என்றோ தேர்தல் இல்லை. தமிழர்களின் தன்மானம் காக்கப்பட வேண்டும் என்பதற்கான தேர்தல். சுயமரியாதையை காப்பாற்ற வேண்டும். நம்முடைய உரிமைகளை நிலைநாட்டுவேண்டும். இழந்த உரிமைகளை, தன்மானத்தை, உரிமைகளை மீட்க உதயசூரியனுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
பழைய நினைவு
உதயநிதி ஸ்டாலின், தி.மு.க தலைவர் கருணாநிதி வெற்றி பெற்ற தொகுதி, கலைஞரின் பெயரனாக போட்டியிடுகிறார். உதயநிதி ஸ்டாலினுக்காக நான் வாக்கு சேகரிக்கும்போது, எனக்கு பழைய நினைவுகள் வருகிறது. நான் முதன்முதலாக ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடும்போது கருணாநிதி எனக்காக வாக்கு கேட்டார்.
கருணாநிதி வென்ற தொகுதி
அப்போது, அவர் ஊரெல்லாம் ஓட்டு கேக்குற உன் பிள்ளைக்காக ஓட்டு கேக்க மாட்டியான்னு மக்கள் கேப்பாங்கன்னு நான் வந்தேன் என்று கருணாநிதி சொன்னார். அதுபோல, உதயநிதிக்காக வாக்கு கேட்டு வந்துள்ளேன். கருணாநிதி இந்தத் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். அன்பழகன் வெற்றி பெற்ற தொகுதி. உதயநிதியை வெற்றி பெற வைப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு வைப்போம் என்று பலரூம் ஒரே குரலில் கூறினார்கள்".